Edapadi Palanisamy Letter : கர்நாடக தேர்தல்.. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களின் மனு ஏற்பு - தவறான புரிதல் என இபிஎஸ் கடிதம்!
ஓபிஎஸ் ஆதரவாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். புலிகேசி நகர் தொகுதி வேட்பாளராக அன்பரசனை நிறுத்தி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் தனது தரப்புக்கு 3 தொகுதிகளில் வேட்பாளரை அறிவித்து இருந்தார். அதன்படி புலிகேசிநகரில் நெடுஞ்செழியனும், காந்தி நகரில் குமாரும், கோலார் தங்கவயலில் அனந்தராஜும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அணியின் வேட்பாளர் நெடுஞ்செழியனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு பதில் இபிஎஸ் அறிவித்த அதிமுக வேட்பாளர் அன்பரசனின் வேட்பு மனு புலிகேசிநகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
அதே நேரத்தில் ஓபிஎஸ் தரப்பில் காந்திநகரில் குமார், கோலார் தங்கவயலில் அனந்தராஜ் ஆகிய 2 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. இதில் காந்தி நகரில் போட்டியிடும் குமார் அதிமுக வேட்பாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குமார், அனந்தராஜ் அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது”என தெரிவித்துள்ளார்.