’அடிப்படை வசதி இல்லாத கரூர் வேளாண்மை கல்லூரி’ அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அடிப்படை வசதி இல்லாத கரூர் வேளாண்மை கல்லூரி’ அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

’அடிப்படை வசதி இல்லாத கரூர் வேளாண்மை கல்லூரி’ அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Published Jun 09, 2025 02:12 PM IST

”மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோரி, கடந்த மார்ச் 7, 2024 மற்றும் மே 6, 2025 ஆகிய தேதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தியும், அரசு இதில் அக்கறை காட்டாமல் இருந்து வருவதாக அதிமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் இத்தகைய போக்கிற்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்”

’அடிப்படை வசதி இல்லாத கரூர் வேளாண்மை கல்லூரி’ அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
’அடிப்படை வசதி இல்லாத கரூர் வேளாண்மை கல்லூரி’ அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தராத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் ஜூன் 11, 2025 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக அரசு மக்களை பல்வேறு வகைகளில் துன்புறுத்தி வருவதாகவும், வருங்கால சந்ததியினர் கல்வி பயில்வதற்குத் தேவையான வசதிகளைக்கூட செய்து தராமல் வஞ்சிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, 2021 டிசம்பரில் அரசாணை வெளியிடப்பட்டு, கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான அம்மா மண்டபத்தில் தொடங்கப்பட்ட புதிய வேளாண்மைக் கல்லூரியில், மாணவ, மாணவியர்களுக்குத் தேவையான ஆய்வகம், கழிப்பிட வசதிகள், தங்கும் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

மாணவர்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கோரி, கடந்த மார்ச் 7, 2024 மற்றும் மே 6, 2025 ஆகிய தேதிகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தியும், அரசு இதில் அக்கறை காட்டாமல் இருந்து வருவதாக அதிமுக தலைவர் குறிப்பிட்டுள்ளார். திமுக அரசின் இத்தகைய போக்கிற்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜூன் 11ஆம் தேதி அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, M.L.A தலைமையில் கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான M.R. விஜயபாஸ்கர் அவர்கள் முன்னிலையில் நடைபெறும். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அன்போடு கேட்டுக்கொண்டுள்ளார்.