’இலாகாவை அடுத்து கட்சி பதவியையும் இழக்கிறாரா துரைமுருகன்?’ பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்தா?
“இந்தப் பதவி, திமுகவில் மிகவும் அதிகாரம் மிக்கதாக கருதப்படுகிறது, ஏனெனில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், மற்றும் அமைப்பு முடிவுகள் பொதுச்செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன”

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை பறிக்கப்பட்ட நிலையில் திமுக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் மாற்றப்படுகிறாரா என கேள்வி எழுந்து உள்ளது.
துரைமுருகனின் அரசியல் பின்னணி
துரைமுருகன், தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவர். வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சட்டப் பட்டம் பயின்று திமுகவின் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 1971ஆம் ஆண்டு முதல் காட்பாடி மற்றும் ராணிப்பேட்டை தொகுதிகளில் போட்டியிட்டு வரும் துரைமுருகன் இதுவரை 2 தேர்தல்களில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளார். 1989 முதல் திமுக ஆட்சி அமைத்த அனைத்து தேர்தல்களிலும் அமைச்சரவையில் பங்கேற்றவர். பொதுப்பணி, நீர்வளம், சட்டம், சிறைத்துறை ஆகிய இலாகாகளை கவனித்த அனுபவம் பெற்றவர்.
திமுகவில் வகித்த பொறுப்புகள்
திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த துரைமுருகன், கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிறகு 2018-ல் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டடார். 2020-ல், பேராசிரியர் க.அன்பழகனின் மறைவை அடுத்து, திமுக பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவி, திமுகவில் மிகவும் அதிகாரம் மிக்கதாக கருதப்படுகிறது, ஏனெனில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம், மற்றும் அமைப்பு முடிவுகள் பொதுச்செயலாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன.
பதவி மாற்றம் குறித்த ஊகங்கள்
கடந்த மே 8ஆம் தேதி துரைமுருகனின் இலாக்கா மாற்றம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் நீக்க கட்சித் தலைமை திட்டமிடுவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவின. இருப்பினும் துரைமுருகனை திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து மாற்றுவது கட்சி இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

டாபிக்ஸ்