"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக - அதிமுக கடும் விமர்சனம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  "பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக - அதிமுக கடும் விமர்சனம்

"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக - அதிமுக கடும் விமர்சனம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 07, 2025 08:26 PM IST

கடந்த 2016இல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு சட்டத்தை தாங்கள் நிறைவேற்றியதாக திமுக அரசு வாய்கூசாமல் பொய் சொல்வதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக  - அதிமுக கடும் விமர்சனம்
"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக - அதிமுக கடும் விமர்சனம்

திமுக அரசு ஐந்தாவது ஆண்டு தொடக்கம்

இதையடுத்து இந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு செய்திருக்கும் சாதனைகளை பட்டியலிட்டு #StalinBuildsTN என்ற ஹேஷ்டாக்கில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டது. திமுக அரசு மக்களுக்காக செய்திருக்கும் நலத்திட்டங்கள் குறித்த பதிவுகள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பல்வேறு பதிவுகளாக அடுத்தடுத்து பகிரப்பட்டன.

அதன்படி, உள்ளாட்சியில் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்த, 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது நம் திராவிட நாயகரின் அரசு என்று புகைப்படத்துடன் பதிவிடப்பட்டது. இந்த பதிவுக்கு எதிர்கட்சியான அதிமுக, கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.

வாய்கூசாமல் பச்சை பொய் சொல்கிறார்கள்

கடந்த 2016இல் அதிமுக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஒரு சட்டத்தை, திமுக தற்போது தாங்கள் நிறைவேற்றியதாக பச்சை பொய் சொல்வதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், "தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தும் சட்டத்தை 20.02.2016 அன்று நிறைவேற்றியது மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு சட்டத்தில் கூட வாய் கூசாமல் பச்சைப்பொய்யை @arivalayam சொல்கிறது என்றால், இந்த கொத்தடிமைகள் கோயபல்ஸையே மிஞ்சிவிட்டனர்!

பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே நடக்கும் இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு, இந்த பச்சைப்பொய்யும் சாட்சி!" என குறிப்பட்டுள்ளது. இந்த பதிவுடன் #நாசமாய்போன_நான்காண்டு- முடியட்டும் இதோடு! என்ற ஹேஷ்டாக்கும் டேக் செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த சட்டத்தை அதிமுக தான் நிறைவேற்றியது என்பதை தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட அறிக்கையும், செய்தி குறிப்பையும் சேர்ந்து பகிர்ந்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு கட்டாயம்

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2016இல் அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலலிதா, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக அப்போது வெளியிட்ட அறிக்கையில், "ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் அளவுகோலாகக் கொண்டு அளப்பது அல்ல. வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும், அதிலும் குறிப்பாக, பெண்களை சென்றடைய வேண்டும். உண்மையான வளர்ச்சியின் அளவுகோல் பெண்கள் எவ்வாறு வளர்ச்சி பெற்றுள்ளனர் என்பதே ஆகும்.

பெண்களின் திறமையும், ஆற்றலும் வெளிப்படுத்தப்பட்டு சமுதாயத்துடன் ஒன்றிணையத ஓர் அங்கமாக பெண்கள் திகழும் போது வளர்ச்சி பன்மடங்காக உயரும். எனவே தான், பெண்களின் வளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு புதுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெண்களை காப்பதோடு மட்டும் ஒரு நல்ல அரசின் கடமை முடிவடைவதில்லை. பெண்கள் தங்கள் சொந்தக் கால்களிலே நிற்கும் திறன் பெற வேண்டும். பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். பொறுப்பு வழங்கப்பட்டால் பெண்கள் தங்கள் தலையெழுத்தை மட்டுமல்லாமல், மற்றவர்களின் தலையெழுத்தையும் மாற்ற முடியும். எனவே தான், உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு என மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டம் எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

அதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றிய மன்றங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள இடங்கள் மற்றும் பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டால் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் மேலும் அதிக அளவில் பங்கு பெறுவதை உறுதி செய்ய இயலும். அதன் மூலம், நகரம் மற்றும் கிராமப்புரங்கள் விரைந்த வளர்ச்சி அடையும் என்பது எனது திடமான நம்பிக்கையாகும்.

எனவே, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மூன்றில் ஒரு பங்கு என பெண்களுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள பதவிகள் 50 சதவீதம் ஆக உயர்த்தப்பட வேண்டும் என நான் உத்தரவிட்டேன். அதன் அடிப்படையில், 20.2.2016 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவயில் இதற்கான சட்ட திருத்த சட்ட முன்வடிவு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் கொண்டு வரப்பட்டது. சட்டப்பேரவையால் இது ஆய்வு செய்யப்பட்டு, ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது