"பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு" 2016இல் நிறைவேற்றியதை கூசாமல் பொய் சொல்லும் திமுக - அதிமுக கடும் விமர்சனம்
கடந்த 2016இல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அரசிதழில் வெளியிடப்பட்ட ஒரு சட்டத்தை தாங்கள் நிறைவேற்றியதாக திமுக அரசு வாய்கூசாமல் பொய் சொல்வதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் 159 இடங்களில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் அமர்ந்தது. திமுக கூட்டணி பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டு தொடக்க விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.
திமுக அரசு ஐந்தாவது ஆண்டு தொடக்கம்
இதையடுத்து இந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு செய்திருக்கும் சாதனைகளை பட்டியலிட்டு #StalinBuildsTN என்ற ஹேஷ்டாக்கில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கப்பட்டது. திமுக அரசு மக்களுக்காக செய்திருக்கும் நலத்திட்டங்கள் குறித்த பதிவுகள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பல்வேறு பதிவுகளாக அடுத்தடுத்து பகிரப்பட்டன.
அதன்படி, உள்ளாட்சியில் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்த, 50 விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது நம் திராவிட நாயகரின் அரசு என்று புகைப்படத்துடன் பதிவிடப்பட்டது. இந்த பதிவுக்கு எதிர்கட்சியான அதிமுக, கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது.