TVK: விஜய் தலைமையை ஏற்கும் ஆதவ் அர்ஜுனா, சிடி.நிர்மல் குமார்! காளியம்மாளின் நிலை என்ன?
ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தேர்தல் பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா மற்றும் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிடி.நிர்மல்குமார் ஆகியோர் இணைய உள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சியின் காளியம்மாளும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனாவுக்கு தவெக தேர்தல் பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பை வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜயின் தலைமையை ஏற்கும் ஆதவ் அர்ஜூனா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக இருந்தவர் ஆதவ் அர்ஜூனா. விசிக தலைவர் திருமாவளவன் - தவெக தலைவர் விஜய் ஆகியோரை கொண்டு அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பங்கேற்காத நிலையில், புத்தக வெளியீட்டு விழாவில் திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து ஆதவ் அர்ஜூனா பேசி இருந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து விலகினார்.
நேற்றைய தினம் தவெக தலைவர் விஜயை சந்தித்து ஆதவ் அர்ஜூனா ஆலோசனை நடத்திய நிலையில், இன்றைய தினம் தவெகவில் இணைவதற்காக பனையூருக்கு வந்து உள்ளார். அவருக்கு தேர்தல் சிறப்பு பிரிவு பொதுச்செயலாளர் என்ற உயரிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தலைவர், பொதுச்செயலாளருக்கு அடுத்தபடியாக இந்த பொறுப்பு மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் வியூகங்களை வகுத்தல், பொதுக்கூட்டங்களை நடத்துதல், தவெக கட்சி தொடர்பான ஊடக செயல்பாடுகள், வேட்பாளர்களின் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறியதல், தவெகவுக்கு சாதகம் மற்றும் பாதகமான தொகுதிகளின் விவரங்களை சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆதவ் அர்ஜூனா மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவல்
அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியின் நிர்வாகியாக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமாரும் தவெகவில் இணைவதற்காக பனையூர் வந்து உள்ளார். பாஜகவின் தகவல் தொழில்நுட்ப அணித் தலைவராக இருந்தவர் சிடி.ஆர்.நிர்மல் குமார். பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியில் பெரிய முக்கியத்துவம் இல்லாததால் தற்போது தவெகவில் இணைய உள்ளார். முன்னதாக அவரது சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து அதிமுகவில் வகித்து வந்த பதவி மற்றும் பொறுப்புகளை சிடிஆர் நிர்மல் குமார் அகற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தவெகவில் காளியம்மாள் இணைகிறாரா?
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாளுக்கும் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. காளியம்மாளை விமர்சனம் செய்து சீமான் பேசும் ஆடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கட்சித் தலைமை மீது காளியம்மாள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. அவரும் இன்றைய தினம் விஜயின் தலைமையை ஏற்று தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இதுவரை பனையூருக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
