டாப் 10 நியூஸ்: பிரதமரை பாராட்டிய ரஜினி முதல் இன்று நடைபெறும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை!
டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய (மே 07) காலை பொழுதின் டாப் 10 செய்தித் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

பிரதமரை பாராட்டிய ரஜினி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மரணம் உள்ளிட்ட முக்கிய செய்திகளை இன்றைய டாப் 10 நியூஸ் தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம் - நடிகர் ரஜினிகாந்த்
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "போராளியின் சண்டை தொடங்கியுள்ளது. இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம். ஒட்டுமொத்த நாடும் பிரதமர் மோடியுடன் உள்ளது." என்று நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும்: ஸ்டாலின்
பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய முப்படைகள் பதிலடி கொடுத்து இருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.எக்ஸ் பக்க பதிவில் அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கும் என கூறியுள்ளார். மேலும், நமது ராணுவத்துடன், நமது தேசத்திற்காக. தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது எனவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நீதிபதி காலமானார்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் (56) நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். 2021ம் ஆண்டு தற்காலிக நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பேற்ற அவர், 2023ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
4 ஆண்டு கால திமுக ஆட்சி
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மே 8 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை அங்கன்வாடி மையங்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கம்
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு மே 11, 12 ம் தேதிகளில் 5,932 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
ஆபரேஷன் சிந்தூர் - இபிஎஸ் பாராட்டு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வரவேற்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவு: "பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய பாதுகாப்பு படையை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், நமது மக்களைப் பாதுகாப்பதற்கும் நமது ராணுவத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
விமானம் ரத்து
எல்லையில் போர் பதற்றம் காரணமாக சென்னை - சண்டிகர் விமானம் ரத்து செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து சண்டிகருக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது.
போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை
நாடு முழுவதும் உள்ள 259 இடங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று (மே 07) கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

டாபிக்ஸ்