‘சீசெல் உணவகம் எனக்கு சொந்தமானது இல்லை’ நடிகர் ஆர்யா விளக்கம்!
”கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவகச் சங்கிலியான சீசெல் உணவகங்களுடன் தொடர்புடையதாக இந்த சோதனை”

நடிகர் ஆர்யா, சென்னையில் உள்ள சீசெல் உணவகம் தனக்கு சொந்தமானது இல்லை என விளக்கம் அளித்து உள்ளார்.
நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் சீசெல் உணவகத்தில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவகச் சங்கிலியான சீசெல் உணவகங்களுடன் தொடர்புடையதாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, காண்டாஞ்சாவடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சீசெல் கிளைகளிலும் வருமானவரி துறை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆர்யாவின் விளக்கம்
இந்த நிலையில் சீசெல் உணவகத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என நடிகர் ஆர்யா விளக்கம் அளித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், சீசெல் உணவகத்தை கடந்த காலங்களில், சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு வரை தான் நடத்தி வந்ததாகவும், தற்போது அது தனது உரிமையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த உணவகத்துடன் தனக்கு தற்போது எந்த தொடர்பும் இல்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.