விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த விஜய்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த விஜய்!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த விஜய்!

Karthikeyan S HT Tamil
Published May 08, 2025 12:47 PM IST

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த விஜய்!
விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்து தெரிவித்த விஜய்!

இதுதொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: "12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள்.

வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர். இதில் 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகளும் அடங்குவர். தேர்வு மொத்தம் 3,316 மையங்களில் நடத்தப்பட்டது. 7,518 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாள் தமிழ் தேர்வில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கின. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை (மே 08) வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளை, results.digilocker.gov.in, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.