SVe Shekher: ’ஆபாச பேச்சு! எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிப்பு!’ ஏன் தெரியுமா?
”SVe Shekher: எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம்”

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பகிர்ந்தது தொடர்பான வழக்கில் பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 2018 இல், தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டி சர்ச்சையில் சிக்கினார். அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையே ஆளுநரின் செயலால் கோபமடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதற்கு வருத்தம் தெரிவித்து ஆளுநரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில், நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் வகையில், தண்டனையை ஒருமாதம் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
