Acid Attack: கோவை நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீச்சு!
பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் அருகில் உள்ள கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவையில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த சிவா. இவரது மனைவி கவிதா 33. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். கவிதா 2016 ல் பஸ்ஸில் பயணிக்கும் பயணிடம் 10 பவுன் தங்க நகை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த நிலையில் அந்த வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கு விசாரணைக்காக இன்று முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்திருந்தார். கவிதா தனது இரு குழந்தைகளையும், கணவரையும் பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் இன்று நீதிமன்றம் வந்த கவிதாவிடம் சிவா வாக்குவாதம் செய்துள்ளார்.
பின் அவரை தொடர்ந்து சென்ற சிவா வழக்கு தொடர்பாக நீதிமன்ற வாசலில் காத்திருந்த கவிதாவிடம் மீண்டும் மீண்டும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை கவிதாவின் உடல் மேல் பரவலாக ஊற்றியுள்ளார். இதில் ஆடைகள் எரிந்து கவிதா பலத்த காயமடைந்துள்ளார். இதனைக் கண்டு அருகில் இருந்த வழக்கறிஞர்கள் தடுக்க முயன்றனர். இதில் வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட்பட்டு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஆசிட் வீசிய சிவா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருநத வழக்கறிஞர்கள் அவரை விரட்டி சென்று பிடித்து அடித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த கவிதா உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்திஷ் நேரடியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பேட்டியளித்த அவர்,விசாரணை நடைபெற்று வருகின்றது குற்றவாளி தண்ணீர் கொண்டு வரும் பாட்டிலில் சாதாரணமாக ஆசிட்டை எடுத்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழுமையான விவரங்கள் விசாரணைக்கு பின்னே தெரியவரும் என்றார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரும் கணவன் மனைவி என்பது தெரிய வந்துள்ளது என்றார். பட்டப் பகலில் ஏராளமானோர் வந்து செல்லும் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பரபரப்பான சூழலை ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன் கோவை நீதிமன்ற வளாகம் அருகே கொலை நடந்த நிலையில் தற்போது பெண் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்