திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணி திருவிழா தொடக்கம்
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
முருக கடவுளின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்து ஒரே தலமாக உள்ளது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். ஆண்டு தோறும் இங்கு நடைபெறும் பல்வேறு விழாக்களில் ஆவணி திருவிழா மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
உள்ளூர் மக்களின் தரிசனத்துக்காக நடத்தப்படும் இந்த ஆவணித் திருவிழா 12 நாள்கள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் மூலவர் சிறிய தேரில் வலம் வருவார்.
அதேபோல் தெப்ப உற்சவம் இந்த நிகழ்வில் இடம்பெறாது. ஆவணி திருவிழாவானது தேய்பிறை நாள்களில் நடைபெறும். இந்த ஆவணி திருவிழாவின் சிறப்பாக சண்முகர், படைத்தல், காத்தல், அழித்தல் என மூன்றையும் நிகழ்த்தும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமாய் அருள்பாலிப்பார்.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. இன்று தொடங்கும் இந்த விழா வரும் 28ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் திருவிழாவின் 10வது நாளான ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறாமல், கோயிலின் உட்பிராகரத்திலும், வளாகத்திலும் நடைபெற்றது. இதையடுத்து தற்போது விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செந்தூர் நகர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறக விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் மாவட்டம் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.