“பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது” திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  “பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது” திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

“பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது” திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

Pandeeswari Gurusamy HT Tamil
Published Jul 02, 2025 04:54 PM IST

ஸ்டாலின் நான்கு நாட்கள் தவித்து வருகிறார். தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சி நடக்கின்றது. இழந்த நகைகளை தருகிறோம் அஜித்குமாரை உயிரோடு தரமுடியுமா?

“பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது” திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
“பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்துவருகிறது” திருப்புவனம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

இளைஞர் அஜித்குமார் போலீஸாரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்து, அதிமுக மற்றும் பாஜகவினர் இணைந்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, சிவகங்கை தொகுதி எம்எல்ஏ செந்தில்நாதன். பாஜக எச். ராஜா, மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்பவர், நகைத் திருட்டுப் புகாரில் தனிப்படைப் போலீஸாரால் விசாரிக்கப்படும்போது, கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.

அஜித்குமாரைத் தாக்கிய தனிப்படைப் போலீஸார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கும், மாவட்ட துணை கண்காணிப்பாளர், திருப்புவனம் டிஎஸ்பி உள்ளிட்டோர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். அஜித்குமார் கொலை வழக்கை முதலில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், நேற்று இரவு சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி காவலாளி அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அஜித்குமாருக்கு நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு அவர், ‘’தமிழக காவல் துறையின் ஈரல் கெட்டு விட்டது. நிர்வாக திறனற்ற ஸ்டாலின் அரசால் அப்பாவி இளைஞர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்து விட்டு ஸாரி கேட்டால் போதுமா? திமுக அரசை முற்றாக அகற்ற சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தொடங்குகிறது’ என்று பேசினார்.

அடுத்து பேசிய சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர் பி. உதயகுமார், ‘’நமக்கு எப்போதும் மடப்புரம் காளியம்மன் துணையிருப்பார். அஜித்குமார் மரணத்திற்கு முதலில் கண்டனம் தெரிவித்தது எடப்பாடி பழனிசாமி. ஸ்டாலின் நான்கு நாட்கள் தவித்து வருகிறார். தமிழகத்தில் காட்டு தர்பார் ஆட்சி நடக்கின்றது. இழந்த நகைகளை தருகிறோம் அஜித்குமாரை உயிரோடு தரமுடியுமா?

அஇஅதிமுக சார்பில் பொதுநல வழக்கு தொடர்ந்து அஜித்குமார் கொலை செய்யப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது. காட்டுமிராண்டித்தனமாக காவல் துறை உள்ளது. கூலிப்படை கூட இப்படி ஒரு சித்ரவதை செய்யாது. அஜித்குமார் தாயிடம் வீடியோ காலில் பேசுவதற்கு முதல்வருக்கு தைரியம் இல்லை. பிணத்தின் மீது பேரம் பேசும் ஆட்சி நடந்து வருகிறது. காவல் கண்காணிப்பாளரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை. அஜித்குமார் உறவினர்களுக்கு இந்த அரசு வாய்ப்பூட்டு சட்டம் போட்டுள்ளது. ஏன் இந்த வழக்கு மட்டும் இவ்வளவு வேகமாக விசாரிக்கப்பட்டது.

அஜித்குமார் இறப்பில் பத்து சந்தேகங்கள் உள்ளது இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஸ்டாலினை முதல் குற்றவாளி யாக சேர்த்தால் உண்மை தெரிந்து விடும். இது வரை 25 லாக்அப் மரணங்கள் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்து திமுகவின் வீழ்ச்சி தொடங்கி விட்டது. தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கை எடப்பாடி பழனிசாமி முதல்வராக அமர வேண்டும்’’ என்று பேசினார்.

அதிமுக மற்றும் பாஜக கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் அவரவர் கட்சிக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், “இளைஞர் அஜித்குமாரின் கொலைக்குக் காரணமான ஸ்டாலின் அரசே ராஜினாமா செய்.. ராஜினாமா செய்.. 5 கோடி ரூபாய் இழப்பீடு கொடு..” போன்ற முழக்கங்களை எழுப்பினார்கள். அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி உருவான பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து நடத்திய முதல் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.