தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!

தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலன் கைது!

Kathiravan V HT Tamil
Published May 18, 2025 04:58 PM IST

“திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்ததால், சமூக அவமானம் ஏற்படும் என்று அஞ்சிய வினோதா, பிறந்த உடனேயே குழந்தையை வீட்டு வாசலில் குழிதோண்டி உயிரோடு புதைத்தார்”

தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலனை கைது!
தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிளம் குழந்தையை புதைத்த விவகாரம்! நர்சிங் மாணவி, காதலனை கைது!

நர்சிங் மாணவியின் செயல்

இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி , கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். திருமணமாகாத நிலையில், தனது காதலன் சிலம்பரசனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால் கர்ப்பமடைந்தார். ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வந்த அவர், தந்தை வெளிநாட்டில் இருக்கும் சூழலில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவ நடைமுறைகளைப் பயின்றிருந்ததால், அவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தையை புதைத்த கொடூரம்

திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்ததால், சமூக அவமானம் ஏற்படும் என்று அஞ்சிய வினோதா, பிறந்த உடனேயே குழந்தையை வீட்டு வாசலில் குழிதோண்டி உயிரோடு புதைத்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவர், குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்தபோது, குழந்தையின் கை வெளியே தெரிந்தது. உடனடியாக அவர் குழந்தையை மீட்டு, பணையப்பட்டி அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்து உள்ளார். முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை மற்றும் கைது

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில் அளித்த புகாரின் அடிப்படையில், பணையப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவி மற்றும் அவரது காதலன் சிலம்பரசன் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், இயற்கைக்கு மாறாக பெற்ற குழந்தையை மறைத்தல் மற்றும் உடந்தை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் சிலம்பரசனை கைது செய்த போலீசார், பின்னர் மாணவியையும் கைது செய்தனர்.நர்சிங் மாணவியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுமாறு அறிவுறுத்திய போலீசார், தற்போது அவரை குழந்தையுடன் மருத்துவமனையில் பாதுகாப்பு வைத்துள்ளனர்.

நர்சிங் மாணவியின் வாக்குமூலம்

நர்சிங் மாணவியின் வாக்குமூலத்தில், மே 23-ம் தேதி சிலம்பரசனை திருமணம் செய்ய இருந்ததாகவும், அதற்கு முன்பு குழந்தை பிறந்தால் சமூகத்தில் தவறாக பேசப்படும் என்று அஞ்சியதாகவும் தெரிவித்தார். பிரசவ நடைமுறைகளை கற்றிருந்ததால், தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகவும், காதலன் சம்மதத்துடன் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருமணமாகாத நர்சிங் மாணவி, பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.