பிணவறை அருகே வீசப்பட்ட நோயாளி – 2 டாக்டர்கள், 2 நர்சுகள் இடமாற்றம்
Madurai GH: மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி, பிணவறை அருகே போடப்பட்ட சம்பவத்தில் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள்.
மதுரை அரசு மருத்துவமனையின் பிணவறை அருகே, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் காலில் பெரிய புண் ஏற்பட்டு, அழுகிய நிலையில் மயக்கம் ஏற்பட்டு ஈ, எறும்பு மொய்த்த நிலையில் ரோட்டில் வீசப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ரெட்கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அந்த அமைப்பினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த நபருக்கு, சர்க்கரை நோய் காரணமாக, காலில் புண் ஏற்பட்டு புரையோடி கால் அழுகிய நிலையில் இருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்நிலையில் அவரை சிகிச்சையில் சேர்த்து ஒரு நாள் கூட நிறைவடையும் முன் ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் வீல் சேரில் அவரை அழைத்து வந்து மீண்டும் பிணவறை அருகே ஓரமாக தள்ளிவிட்டு சென்றார். இதுகுறித்து மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் மருத்துவமனையில் அந்த நோயாளி அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நோயாளிக்கு சிகிச்சையளிக்காமல் அவரை வெளியேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து புகாரின்பேரில் விசாரணை நடத்திய டீன் ரத்தினவேல், நோயாளிக்கு சிகிச்சையளிக்காமல் பணியின்போது அலட்சியமாக இருந்ததாக 2 பயிற்சி டாக்டர்கள் மற்றும் நர்ஸ், மருத்துவமனை ஊழியர் ஆகிய 4 பேரையும், அரசு மருத்துவமனையில் இருந்து பாலரெங்காபுரத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் அலட்சியம்காட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்