Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவ படையினர்!
மக்களவை தேர்தல் தேதி வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழக பாதுகாப்பு பணியில் 25 கம்பெனி மத்திய ஆயுத பாதுகாப்புப் படையினரை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. அதன்படி மார்ச் 1 ஆம் தேதி 15 கம்பெனி படையினரும், மார்ச் 7 ஆம் தேதி 10 கம்பெனி படையினரும் தமிழகத்துக்கு வரவுள்ளதாக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன.
தொகுதிப்பங்கீடு, கூட்டணி என அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வரும் சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர்.