சாதி சான்றிதழ் வழங்கும் விவகாரம்-கோட்டாட்சியருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
Madurai high court: கோட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாயை மதுரை இலவச சட்ட உதவிகள் மையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதி சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழை வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்யா என்பவர் செய்த மேல்முறையீட்டு வழக்கில் கோட்டாட்சியருக்கு 10000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
திருச்சி சேர்ந்த நித்யா என்பவர் தனது மகன் மற்றும் மகளுக்கு காட்டு நாயக்கன் சாதி சான்றிதழ் வழங்கக் கோரிய நிலையில் திருச்சி கோட்டாட்சியரிடம் மனுதாக்கல் செய்தார் . ஆனால் அதற்கு திருச்சி மாவட்ட கோட்டாட்சியர் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். இதையடுத்து நித்யா காட்டு நாயக்கர் ஜாதி சான்று கோரி விண்ணப்பித்த மனுவை நிராகரித்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தனது குழந்தைகளுக்கு ஜாதி சான்று வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு நெய்தார்.
இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, விசாரித்தது.
" குழந்தைகளின் தந்தை காட்டுநாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் திருச்சி வருவாய் மண்டல கோட்டாட்சியரிடம் இருந்து அதற்கான சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். மனுதாரர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இதனால் காட்டுநாயக்கன் சாதி சான்றுகளை குழந்தைகளுக்கு வழங்க கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளார்., திருச்சி வருவாய் மண்டல கோட்டாட்சியர், இணையம் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மனுதாரரும் விண்ணப்பித்துள்ளார். அதோடு இதுவரை கணவரது சாதிக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் எந்த பலன்களையும் பெறவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்கையில் அவர்களின் குழந்தைகளுக்கு தந்தையின் சாதியின் அடிப்படையிலோ அல்லது தாயின் சாதியின் அடிப்படையில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசின் இரண்டு அறிவிப்புகள் மிக தெளிவாக உள்ளது
இருப்பினும் மனுதாரரின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்து திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவுகள் தெளிவாக இருந்தும் எவ்விதமான காரணமும் இன்றி சாதிச்சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. மேலும் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, சட்டத்தின் படி சாதி சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கோட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாயை மதுரை இலவச சட்ட உதவிகள் மையத்திற்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது.
டாபிக்ஸ்