’இந்த கேள்விக்கு பதில் சொன்னால் ஒரு மில்லியன் டாலர் பரிசு!’ முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த அதிரடி அறிவிப்பு!
சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கு தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சிந்துவெளி எழுத்து வடிவ நாகரிகம் குறித்து விளக்கம் அளிக்கும் அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
2021-ஆம் ஆண்டு நம்முடைய அரசு அமைந்ததும், ‘திராவிட மாடல் அரசு’ என்று நாங்கள் அதற்கு பெயர் சூட்டினோம். “இது ஒரு கட்சியின் அரசல்ல, இனத்தின் அரசு” என்று குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன வரலாற்றை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் முதிர்ச்சியின், அறிவுச்செயல்பாடாக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை நாம் இப்போது கொண்டாடி இருக்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், இப்படி ஒரு விழாவை அரசே முன்னின்று நடத்தாது என்று சொல்லத்தக்க வகையில், மாபெரும் பண்பாட்டுப் பெருவிழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
திருப்புமுனையை தந்த ஆய்வு முடிவு
இந்தக் கருத்தரங்கத்தில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இருபதுக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு ஆய்வறிக்கைகள் வழங்க இருப்பது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் நாளன்று உலகுக்கு அறிவிக்கப்பட்டது. தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ் என்ற இதழில் இந்தியத் தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார். இது இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி, நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது.
ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனையை வரலாறு என்று அதற்கு முன்னர் பலரும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷல் அவர்களின் ஆய்வுகள்தான். சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது, அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது.
“என்னதான் அங்கு இல்லை!” என்று கேட்கும் அளவுக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு நாகரிகம் சிந்துவெளியில் இருந்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு அடையாளங்கள் காட்டுகிறது.
காளைகள்தான் திராவிட சின்னம்!
சிந்து வெளியில் காளைகள்தான் இருந்தது. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில், ஏறுதழுவுதல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கிறது. காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்று வருகிறது. சிந்துவெளி நாகரிகம் சார்ந்த ஒரு முத்திரையில் காளை உருவமும், அதை அடக்க முயலும் வீரரை அந்த காளை தூக்கி வீசுவதும் இருக்கிறது.
அப்படியே மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால், குதிரை முத்திரை சிந்துவெளியில் இல்லை. வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை! ஆனால், இந்த இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது! கீழடியிலும் இருக்கிறது! இதையெல்லாம் வைத்துதான் சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடம்தான் சிந்துவெளி என்று நிறுவப்பட்டிருக்கிறது.
சிந்துவெளி பற்றி ஜான் மார்ஷல் அவர்கள் தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்டதும், தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய விடுதலை நாளிதழில் அதைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். பேசியும் இருக்கிறார். தந்தை பெரியார் அவர்களை தொடர்ந்து பேரறிஞர் அண்ணா அவர்களும் 1948-ஆம் ஆண்டிலேயே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை வெளிக்கொணர்ந்த சர் ஜான் மார்ஷல் அவர்களின் சாதனைகளை பாராட்டி எழுதியிருக்கிறார்.
சிந்துவெளிப் பண்பாட்டை கண்டுபிடித்தது மூலமாக, நம்முடைய வரலாற்றையும், பெருமையையும் மீட்டவர் ஜான் மார்ஷல். அவரைச் சிறப்பிப்பது தமிழ்நாடு அரசுக்குப் பெருமை! சிந்துவெளிப் பண்பாடு பேசப்படும் வரைக்கும், ஜான் மார்ஷல் அவர்களுக்கு சிலை வைத்தது திராவிட மாடல் அரசு என்ற பெருமையும் நிலைக்கும்.
அறிவியல் ஆய்வுகள் உடன் உறுதி செய்து உள்ளோம்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி உலக அளவில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறையால், இப்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளை ஆய்வு மூலம் தண் பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவியல் வழிப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் உறுதி செய்திருக்கிறோம்.
கீழடி அருங்காட்சியகம் போலவே, பொருநையிலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. நம்முடைய அகழாய்வு முடிவுகள் பெரும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, மட்பாண்டங்களில் காணப்படும் குறியீடுகளில், சிந்துவெளி எழுத்துக்களின் ஒப்பீட்டளவில் ஒற்றுமைகள் காணப்படுகின்ற இந்த மேடையில் வெளியிடப்பட்ட ஆய்வுநூல் விரிவாக விளக்குகிறது.
சிந்துவெளி நாகரிகத்தில், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட முத்திரைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகளையும், தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைக்கும் குறியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 60 விழுக்காடு குறியீடுகள் ஒரே தன்மையிலான குறியீடுகளாக காணப்படுகிறது. அதேவேளையில், சிந்துவெளியில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும், தமிழ்நாட்டில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும், அதிகபட்சமாக 90 விழுக்காடு ஒரே தன்மை கொண்டவையாக காணப்படுகிறது என்று நம்முடைய தொல்லியல் ஆய்வாளர்கள் இப்போது நிறுவியிருக்கிறார்கள்.
சிந்துவெளி நாகரிக்கத்துக்கும் இடையேயான பண்பாட்டுத் தொடர்பு
சிந்துவெளியில் கிடைத்த சூதுபவளம், அகேட், நீலப் பளிங்குக் கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கல்மணிகள், உயர் வெண்கலப் பொருட்கள் மற்றும் கருப்பு, சிவப்பு மட்கலன்கள், நீத்தாரை புதைக்கும் வழக்கம் போன்ற பண்பாட்டுக் கூறுகளின் எச்சங்கள், தென்னிந்தியாவுக்கும், சிந்துவெளி நாகரிக்கத்துக்கும் இடையேயான பண்பாட்டுத் தொடர்பை, தொடர்ச்சியை உறுதிசெய்கிறது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று, அண்மையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, மாங்காடு, தெலுங்கானூர், கீழ்நமண்டி போன்ற இடங்களிடல் கிடைத்த அறிவியல் காலக்கணக்கீடுகள் சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சமகாலத்தவை என்பதை உறுதிசெய்கிறது என்று அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்.
ஒரு மில்லியன் டாலர் நிதி
செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்பது முத்தான முதல் அறிவிப்பு!
சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு!
தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இது மூன்றாவது அறிவிப்பு. இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.