WPL 2023: எலிமினேட்டருக்கு முன் ஒத்திகை! யுபி வாரியர்ஸ் சொதப்பல் பேட்டிங்
மகளிர் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி, யுபி வாரியர்ஸ் அணிக்கு எலிமினேட்டருக்கு முன்னரான ஒத்திகையாக அமைந்த நிலையில் முதல் பேட்டிங் பிடித்த ரன் குவிப்பில் ஈடுபடாமல் சொதப்பலாக பேட் செய்துள்ளது.
மகளிர் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி யுபி வாரியர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணியின் கேப்டனும் தொடக்க பேட்டருமான அலிசா ஹீலி நல்ல தொடக்கத்தை தந்தார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஸ்வேதா செஹ்ராவத் 19, சிம்ரன் ஷேக் 11 ரன்களில் நடையை கட்டி ஏமாற்றம் அளித்தனர்.
அதேபோல் சிறப்பாக பேட் செய்து வந்த அலிசா ஹீலியும் 36 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார். பின்னர் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தஹிலா மெக்ராத் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். மற்றவர்கள் பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாத நிலையில் தஹிலா மெக்ராத் அரைசதம் எடுத்தார்.
அவர் அடித்த 58 ரன்களால் யுபி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 138 ரன்கள் எடுத்தது. டெல்லி பெளலர்கள் ஆலிஸ் கேப்ஸி 3, ராதா யாதவ் 2, ஜேஸ் ஜோனாசென் 1 விக்கெட்டுகளை எடுத்ததுடன் அசத்தலான பெளலிங்கால் யுபி வாரியர்ஸ் பேட்டர்களை பெரிய ஸ்கோர் எட்டவிடாமல் கட்டுப்படுத்தினர்.
புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள யுபி வாரியர்ஸ் எலிமினேட்டர் சுற்று போட்டி விளையாட இருப்பது உறுதியான நிலையில், இந்த போட்டி நாக்அவுட் சுற்றுக்கான ஒத்திகையாக அமைந்தது.
இருப்பினும் இந்தப் போட்டியில் மிகப் பெரிய ஸ்கோரை குவிக்காமல் யுபி பேட்டர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மகளிர் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், வரும் 24ஆம் தேதி நாக்அவுட் போட்டியாக எலிமினேட்டர் சுற்று போட்டி நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள அணிகள் மோதவுள்ளன. அந்த வகையில் மூன்றாவது இடத்தில் உள்ள யுபி வாரியர்ஸ் எலிமினேட்டர் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், தற்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி அணி நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த சூழ்நிலையில் டெல்லி அணி நேரடியாக பைனலுக்கு செல்லும் விதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. யுபி வாரியர்ஸ் அணியை பெளலிங்கில் நன்கு கட்டுப்படுத்தியது போல், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறலாம்.