Ipl 2023 format: மீண்டும் பழைய பாணியில் ஐபிஎல்! சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ஆட்டம்
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறுவதோடு, சிஎஸ்கே அணியும் தனது சொந்த மண்ணில் களம் இறங்கவுள்ளது.
பிசிசிஐ தலைவர் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஐபிஎல், மகளிர் ஐபிஎல், யு15 மகளிர் கிரிக்கெட் போட்டிகள் குறித்து விஷயங்கள் பின்வருமாறு:
ட்ரெண்டிங் செய்திகள்
கொரோனாவுக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது போல் 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் பழைய நடைமுறையிலேயே நடத்தப்படும். அதன்படி 10 அணிகளும் பாதி ஆட்டங்களை தங்களது சொந்த மண்ணிலும், மீத ஆட்டங்களில் இதர நகரங்களிலும் விளையாடும்.
2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மகளிர் ஐபிஎல் தொடர் தொடங்கப்படும்.
மகளிர் யு15 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் போட்டிகள் டிசம்பர் 26 முதல் ஜனவரி 12 வரை பெங்களூர், ராஞ்சி, ராஜ்கோட், இந்தூர், ராய்ப்பூர், புணே ஆகிய நகரங்களில் நடைபெறும்.
கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சொந்த மைதானமான சென்னையில் விளையாடியது. சிஎஸ்கே - மும்பை இந்தியனஸ் இடையே நடைபெற்ற குவாலிபயர் போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பின் 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் பாதியும், ஐக்கிய அரபு அமீரகத்தில் பிற்பகுதியும் நடைபெற்றது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மும்பை வான்கடே மைதானம் ஹோம் கிரெவுண்டாக இருந்தது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முழுவதும் மும்பை, புணே நகரில் நடைபெற்ற நிலையில், ப்ளேஆஃப் போட்டிகள் மட்டும் கொல்கத்தா, அகமதாபாத் நகரில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பழைய பாணிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.