Malaysia Open: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அரையிறுதிக்கு தகுதி.. விட்டத்தை பிடிப்பார்களா சாத்விக் - சிராக் ஜோடி
Malaysia Open 2025: மலேசியா ஓபன் கடந்த தொடரில் சாத்விக் - சிராக் ஜோடி ரன்னர் அப் பட்டத்தனை வென்றனர். இந்த முறை இந்த ஸ்டார் ஜோடிகள் தற்போது அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஸ்டார் ஜோடிகளான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சாத்விக் - சிராஜ் ஜோடி கலக்கல்
மலேசியா ஓபன் தொடர் மதிப்புமிக்க சூப்பர் 1000 தொடராக உள்ளது. இந்த தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி போட்டியில் ஏழாவது சீட் இந்திய வீரர்காளான சாத்விக் - சிராக் ஜோடி, மலேசியா ஜோடி யூ சின் ஓங் மற்றும் ஈ யி தியோவை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த போட்டியில் 26-24, 21-15 என்ற நேர் செட்களில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது. இந்த போட்டி 49 நிமிடம் வரை நீடித்தது.
மலேசியா ஓபன் தொடர் கடந்த பதிப்பில் இந்த ஜோடி இறுதிவரை தகுதி பெற்று, கோப்பையை கைவிட்டு ரன்னர் அப் ஆனது. இதையடுத்து தற்போது இவர்கள் மீண்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து அரையிறுதி போட்டியில் இந்த ஜோடி தென் கொரியாவின் வோன் ஹோ கிம் மற்றும் சியுங் ஜே சியோவை எதிர்கொள்ள இருக்கிறது.
த்ரில் ஆட்டம்
இரு நாட்டு வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அடுத்தடுத்து புள்ளிகளை பெற்றன. 11-9 என்ற கணக்கில் இருந்த பின்னடைவு பெற்றிருந்த இந்தியா, பின்னர் 18-16 என முன்னேறியது. இதன் பின்னர் தொடர்ச்சியாக மூன்று புள்ளிகளை பெற்று 19-19 என சமநிலை பெற்றது. அதன் பின் 20-19 என முன்னிலை பெற்றது.
தொடர்ச்சியாக நான்கு கேம் புள்ளிகளை பெற்ற சாத்விக் - சிராக் ஜோடி முதல் சுற்றில் வெற்றியை தன் வசமாக்கினர். இரண்டாவது சுற்றில் மலேசிய ஜோடி கம்பேக் கொடுக்கும் விதமாக வலுவான தொடக்கத்தை தந்தது. 11-8 என கணக்கில் வலுவாகவே இருந்தது.
பின் இந்திய ஜோடி விஸ்வரூபடம் எடுக்க ஆட்டத்தில் சூடு பிடித்தது. 13 புள்ளிகளை பெற்று முன்னேறி இரண்டாவது சுற்றையும் வென்றதோடு, தொடர்ச்சியாக இந்த தொடரில் மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர்
2025 பிடபிள்யூஎஃப் உலக டூரில் ஒரு பகுதியாக மலேசியா ஓபன் தொடர் இருந்து வருகிறது. பேட்மிண்டன் விளையாட்டில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் தொடராகவும் இது அமைந்துள்ளது. மலேசியா பேட்மிண்டன் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த தொடர் 1937ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் தொடர் 68வது பதிப்பாக உள்ளது. இந்த தொடரின் மொத்த பரிசு தொகை 1,45,000 அமெரிக்க டாலர் ஆகும்.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு, மகளிர் ஒற்றையர் பிரிவு, கலவை இரட்டையர் பிரிவு என அனைத்து பிரிவுகளில் இந்திய வீரர்கள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது சாத்விக் - சிராக் ஜோடி மட்டும் அரையிறுதி வரை முன்னேறி கோப்பையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
டாபிக்ஸ்