இன்டர் மியாமி அணிக்காக லியோனல் மெஸ்ஸியின் கடைசி நிமிட கோல்.. ஆரவாரம் செய்த ரசிகர்கள்
கடைசி நிமிடங்களில், 18 வயதான சான்டியாகோ மோரல்ஸ் கொடுத்த பாஸை மெஸ்ஸி கோலாக மாற்றினார். இதையடுத்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

லியோனல் மெஸ்ஸி தனது ஸ்டைலில் அதிரடிக்கு திரும்பினார், ஜமைக்காவில் நடந்த கான்காகாஃப் சாம்பியன்ஸ் கோப்பையின் மேட்ச்சில் இன்டர் மியாமி அணி, காவலியர் எஃப்சியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. மெஸ்ஸி கடைசி நிமிடத்தில் (90+2) கோல் போட்ட போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
ஒர்க் லோடு கவலைகள் காரணமாக அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, மூன்று போட்டிகளுக்கு ஓரங்கட்டப்பட்டார், தலைமை பயிற்சியாளர் ஜேவியர் மாஸ்கெரானோ காயங்களைத் தடுக்க ஓய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தனது திட்டங்களை மறைத்து வைத்திருந்தாலும், போட்டிக்கு முன்னதாக மெஸ்ஸியின் ஈடுபாட்டை மஸ்கெரானோ சூசகமாக சுட்டிக் காட்டியிருந்தார்.
"லியோ கடந்த மூன்று அல்லது நான்கு ஆட்டங்களில் விளையாடவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்" என்று மஸ்கெரானோ போட்டிக்குப் பிறகு கூறினார். "நாங்கள் அவரை விளையாட விரும்பினோம், ஆனால் அவரை ஆடுகளத்திற்கு அனுப்புவதற்கான தருணத்தை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர் ஆடுகளத்தில் மிகவும் நன்றாக உணர்ந்ததால் அது நல்லது என்று நான் நினைக்கிறேன். அவரால் கோல் அடிக்க முடியும். ஜமைக்காவில் உள்ளவர்கள் அவரைப் பார்க்க முடிந்தது. எல்லோருக்கும் இனிய இரவு." என்று தெரிவித்தார் ஜேவியர்.
53வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸுக்கு பதிலாக மெஸ்ஸி களத்தில் இறங்கினார், அவரது இருப்பு உடனடியாக மியாமியின் தாக்குதலின் வேகத்தை உயர்த்தியது. அவர் களத்தில் இறங்கியபோது அரங்கம் அதிர்ந்தது, அவர் ஏமாற்றவில்லை.
ஆட்டத்தின் இறுதி தருணங்களில், மெஸ்ஸி 18 வயதான உள்நாட்டு திறமை சாண்டியாகோ மோரல்ஸிடமிருந்து ஒரு பாஸைப் பிடித்து, வலையின் தொலைதூர மூலையில் ஒரு துல்லியமான ஷாட்டை அடித்தார். ஜமைக்கா ரசிகர்கள் கூட கால்பந்து ஜாம்பவானின் கோலை கொண்டாடாமல் இருக்க முடியவில்லை.
மெஸ்ஸி போட்ட அட்டகாசமான கோல்
டாடியோ அலெண்டே மற்றும் சுவாரெஸ் ஆகியோரின் கோல்கள் மூலம் முதல் லெக்கில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது மியாமி. தற்போது இரண்டாவது லெக் மேட்ச்சிலும் அதே அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
ஜமைக்காவில் மெஸ்ஸியின் வருகை மிகவும் எதிர்பார்க்கப்பட்டது, கலாச்சாரம், பாலினம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அமைச்சர் ஒலிவியா கிரேஞ்ச் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் அவரையும் அவரது அணியினரையும் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அதிகப்படியான தேவை காரணமாக, போட்டி காவலியர் எஃப்சியின் வழக்கமான 3,000 இருக்கைகள் கொண்ட இடத்திலிருந்து 35,000 கொள்ளளவு கொண்ட தேசிய மைதானத்திற்கு மாற்றப்பட்டது. மெஸ்ஸி மேட்ச்சில் என்றதால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.
காலிறுதியில் எல்ஏஎஃப்சியுடன் மோதல்
வெற்றி உறுதி செய்யப்பட்டவுடன், இன்டர் மியாமி இப்போது எல்ஏஎஃப்சிக்கு எதிரான காலிறுதியில் மோதுகிறது, அவர்கள் ரவுண்ட் ஆஃப் 16 மோதலில் எல்ஏஎஃப்சி, கொலம்பஸ் அணியை தோற்கடித்தது.

டாபிக்ஸ்