துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: மொத்தம் 7 பதக்கங்களை வென்ற இந்தியாவுக்கு மூன்றாவது இடம்
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: மொத்தம் 7 பதக்கங்களை வென்ற இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை: மொத்தம் 7 பதக்கங்களை வென்ற இந்தியாவுக்கு மூன்றாவது இடம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 22, 2025 04:38 PM IST

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை 2025 துப்பாக்கி சுடுதல் தொடரில் இந்தியாவுக்கான கடைசி பதக்கத்தை பெண்கள் பிரிவில் நடந்த 25மீ பிஸ்டல் நிகழ்வில் வென்றார் வீராங்கான சிம்ரன்ப்ரீத் கெளர். லிமா சுற்று போட்டிகளில் மொத்தம் 7 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது இந்தியா.

Simranpret Kaur
Simranpret Kaur (@India_AllSports/X)

டாப் 3 இடம்

திங்கள்கிழமை நடைபெற்ற மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் இந்தியாவின் இறுதிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் உட்பட இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7ஆக உயர்ந்தது.

அமெரிக்காவும் ஏழு பதக்கங்களை வென்றிருந்தாலும், அதிக தங்கப் பதக்க எண்ணிக்கையுடன் இந்தியாவை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. சீனா நான்கு தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஆறு வெண்கலப் பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

இந்தியா சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவராக 18 வயதான சுருச்சி இந்தர் சிங் இருக்கிறார். இந்தியாவுக்கு கிடைத்த இரண்டு தங்க பதக்கங்களையும் இவர் தான் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்ற மனு பாக்கரை முந்தி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பட்டத்தை வென்றார், பின்னர் கலப்பு அணி போட்டியில் செளரப் செளத்ரியுடன் இணைந்து தங்கம் வென்றார்.

டிராப் கலப்பு அணி போட்டி

திங்கட்கிழமை நடைபெற்ற டிராப் கலப்பு அணி போட்டியில், தொண்டைமான் மற்றும் துபே இணைந்து 134 புள்ளிகளைப் பெற்று எட்டாவது இடத்தைப் பிடித்தனர். அதே நேரத்தில் மற்றொரு இந்திய ஜோடியான லக்சய் மற்றும் நீரு மொத்தம் 128 புள்ளிகளுடன் 13வது இடத்தைப் பிடித்தனர். முதல் நான்கு அணிகள் மட்டுமே பதக்கச் சுற்றுகளுக்கு முன்னேறிய நிலையில், இந்தியா சார்பில் இரண்டு ஜோடிகள் பங்கேற்ற போதிலும் பதக்கத்தை வெல்ல முடியவில்லை.

இந்தியாவுக்கு பதக்கம் வென்றவர்கள்

கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த 10மீ ஏர் ரைபிள் கலப்பு அணியில் ருத்ராங்ஷ் பாட்டீல் மற்றும் ஆர்யா போர்ஸ் ஜோடி, நார்வேயின் ஜான் ஹெர்மன் ஹெக் மற்றும் ஜீனெட் ஹெக் டுஸ்டாட் ஆகியோருக்கு எதிராக 11-17 என்ற புள்ளி கணக்கில் தோல்வியை தழுவி வெள்ளி பதக்கத்தை வென்றது.

25மீ பிஸ்டல் போட்டியில் ஹைதராபாத்தை சேர்ந்த சிம்ரன்ப்ரீத் பிரார் வெள்ளி பதக்கம் வென்றார்.

10மீ ஏர் ரைபிள் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பாபுதா வெள்ளி பதக்கம் வென்றார். 10மீ ஏர் பிஸ்டல் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் செளரப் செளத்ரி வெண்கலம் வென்றார். இந்த போட்டியில் பெண்கள் பிரிவில் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளரான மனு பாக்கர் வெள்ளி பதக்கம் வென்றார்.

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை 2025

உலக அளவில் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியாக இருந்து வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை தொடர், முதல் சுற்று அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது பெரு நாட்டின் லிமா நகரில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்துள்ளது.

மூன்றாவது சுற்று சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியா நகரிலும், நான்காவது சுற்று இத்தாலி நாட்டின் லோனாடோ நகரிலும், கடைசி சுற்று கத்தாரில் உள்ள தோஹா நகரில் நடைபெற இருக்கிறது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.