Ind vs Aus 2nd T20: ரோஹித் பொறுப்பான ஆட்டம், தினேஷ் கார்த்திக் அதிரடி பினிஷ்!
பெளிலிங்கிலும் சரி பேட்டிங்கிலும் சரி ஒரு முழுமையான ஆட்டத்தை ஓர் அணியாக இந்தியா சிறப்பாக வெளிப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.
ஏற்கனவே 0-1 என்ற கணக்கில் இந்தியா அணி பின்னடைவு பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் கட்டாய வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழப்பதை தவிரக்கலாம் என்ற நெருக்கடியுடனே களமிறங்கியது. எதிர்பார்த்தது போல் பும்ரா தனது பிட்னஸை உறுதிப்படுத்திய நிலையில் உமேஷ் யாதவ்க்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டார்ய.
ட்ரெண்டிங் செய்திகள்
அதேபோல் பெளலிங்கில், குறிப்பாக டெத் ஓவர்களில் சொதப்பி வரும் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். நாக்பூரில் ஏற்கனவே பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது. இதனால் ஆட்டம் 2 மணி நேர தாமதத்துக்கு பின்னரே தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் எதிர்பார்த்தபடி பெளலிங்கை தேர்வு செய்தார். 8 ஓவர் ஆட்டம் என்பதால் தொடக்கத்திலிருந்தே அதிரடியை தொடங்கினார்கள் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்.
கடந்த போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த கிரீன் 5 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக வந்த மேக்ஸ்வெல்லும் அக்ஷர் படேல் வீசி தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கிளீன் போல்டு ஆகி வெளியேறினார். இவருக்கு அடுத்தபடியாக டிம் டேவிட்டையும் 2 ரன்னில் காலி செய்தார் அக்ஷர் படேல்.
அடிக்க ஆசைப்பட்டும் ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்ட இருக்க கேப்டன் பின்ச் அதிரடியை தொடர்ந்தார். 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த அவர் அற்புதமான யார்க்கர் மூலம் கிளீன் போல்டாக்கினார் பும்ரா.
முதல் போட்டியில் ஆட்டத்தை சூப்பராக பினிஷ் செய்த வேட் இந்த ஆட்டத்தில் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். ஹர்ஷல் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் 3 சிக்சர்களை அடித்தார். 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் வேட்.
8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 90 ரன்கள் எடுத்தது. 91 என்ற இலக்குடன் களமிற்ங்கிய இந்தியாவும் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்ட தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய ஹசில்வுட் ஓவரில் மூன்று சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.
ஸ்பின் ஓவரில் பேட் செய்வதற்கு சூழ்நிலை கடினமாக இருந்த நிலையில் அதை பயன்படுத்திய ஆஸ்திரேலியா கேப்டன் பின்ச், ஸ்பின்னரான ஸாம்பாவை பந்து வீச அழைத்தார். அதற்கு கை மேல் பலனாக கேஎல் ராகுல் விக்கெட் கிடைத்தது.
இவருக்கு அடுத்தபடியாக வந்த கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் காலி செய்து அதிர்ச்சி கொடுத்தார் ஸாம்பா. ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் ரோஹித் ஷர்மா பந்தை பவுண்டரி, சிக்ஸர் என விரட்டினார்.
ஆட்டத்தின் 7வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 9 ரன்னில் அவுட்டாக, கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களமிறங்கிய தினேஷ் கார்த்திக், டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் 1 சிக்ஸர், 1 பவுண்டரி என இரண்டே பந்துகளில் ஆட்டத்தை முடித்தார். இதனால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, தொடரையும் 1-1 என சமன் செய்ததது.
தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கி 20 பந்துகளை பிடித்து 46 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய பெளலிங்கை பொறுத்தவரை அக்ஷர் படேல் 2 ஓவர்கள் வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறுகிறது.
டாபிக்ஸ்