Swiss Open 2025: தொடரும் இந்தியர்களின் ஆதிக்கம்.. மகளிர் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றில் காயத்ரி, ட்ரீசா ஜோடி
தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Swiss Open 2025: தொடரும் இந்தியர்களின் ஆதிக்கம்.. மகளிர் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றில் காயத்ரி, ட்ரீசா ஜோடி

Swiss Open 2025: தொடரும் இந்தியர்களின் ஆதிக்கம்.. மகளிர் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றில் காயத்ரி, ட்ரீசா ஜோடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Mar 19, 2025 05:54 PM IST

சுவிட்சர்லாந்தின் பாசலில் நடைபெற்று வரும் சுவிஸ் ஓபன் 2025 பேட்மிண்டன் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் மகளிர் இரட்டையர் ஜோடியான காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி முன்னேறினர்.

தொடரும் இந்தியர்களின் ஆதிக்கம்..  மகளிர் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றில் காயத்ரி, ட்ரீசா ஜோடி
தொடரும் இந்தியர்களின் ஆதிக்கம்.. மகளிர் இரட்டையர் பிரிவில் அடுத்த சுற்றில் காயத்ரி, ட்ரீசா ஜோடி

மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி

உலகின் 9-வது இடத்தில் உள்ள இந்திய ஜோடியான, காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர் மற்றும் நெதர்லாந்தின் கெல்லி வான் பியூட்டன் ஜோடியை 21-16, 21-17 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தியது. தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்த ஜோடி அடுத்த போட்டியில் ஜெர்மனியின் செலின் ஹப்ஸ்ச் மற்றும் அமெலி லெஹ்மானை எதிர்கொள்ள உள்ளார்கள்.

இந்தியாவின் மகளிர் இரட்டையர் பிரிவில் பிரியா கோன்ஜெங்பாம்-ஸ்ருதி மிஸ்ரா மற்றும் வர்ஷினி விஸ்வநாத் ஸ்ரீ-ஆரத்தி சாரா சுனில் ஆகியோர் தங்களது தொடக்க சுற்றில் தோல்வியடைந்தனர். எனவே இந்த பிரிவில் நான்காம் சீட் வீராங்கனைகளான காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகள்

ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று போட்டியில் சீனா வீரர் யுஹாங் வாங்குக்கு எதிராக 21-13, 21-4 என்ற ஆதிக்கம் மிக்க வெற்றியை பெற்றார் இந்திய வீரர் சங்கர் சுப்பிரமணியம். மொத்தம் 23 நிமிடங்கள் மட்டுமே இந்த போட்டி நீடித்தது.

இந்திய வீரரான சதீஷ் கருணாகரன், மலேசியா வீரர் ஜஸ்டின் ஹோ ஷோவுக்கு எதிராக 21-19,19-21,21-16 என்ற போராடி வெற்றியை பெற்றார்.

முன்னதாக, ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று போட்டியில் இங்கிலாந்து வீரர் சோழன் கயன் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். 42 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரதான் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தனது அடுத்தபோட்டியில் ஜப்பான் நாட்டு வீரர் நிஷிமோட்டோவை எதிர்கொண்ட 19 வயது வீரரான ஆயுஷ் ஷெட்டி, உலக அளவில் 400வது ரேங்கிங்கில் இருந்து வரும் பிரான்ஸ் வீரர் ரஃபேல் கவியோஸ் என்பவருக்கு எதிராக 21-6, 21-8 என்ற கணக்கில் தோல்வியுற்றார்.

முன்னதாக தகுதி சுற்று போட்டியில் மற்றொரு இந்திய வீரரான தருண் மன்னேபள்ளியை 21-7, 21-10 என்ற கணக்கில் வீழ்த்தினார் சுப்பிரமணியன். இதையடுத்து பிரதான சுற்றில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்னசன்னை எதிர்கொள்ள இருக்கிறார்.

இந்தியர்கள் ஆதிக்கம்

ஆண்கள் ஒற்றையர் பிரதான சுற்றில் நான்கு நேரடி நுழைவுகள் உட்பட ஆறு இந்தியர்கள் இடம்பெறுகிறார்கள். அதன்படி ஸ்ரீகாந்த் கிடாம்பி மற்றும் எச்.எஸ். பிரணாய், முதல் சுற்றில் ஒருவருக்கொருவர் மோதுவார்கள், பிரியான்ஷு ராஜாவத் மற்றும் கிரண் ஜார்ஜ் ஆகியோரும் விளையாட இருக்கிறார்கள்.

ஜார்ஜ் டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை எதிர்கொள்கிறார், அதே நேரத்தில் ராஜாவத் உள்ளூர் வீரர் டோபியாஸ் குயென்சியை எதிர்கொள்கிறார்.

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் மார்ச் 18 முதல் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 2025 பிடபிள்யூஎஃப் உலக டூரில் ஒன்பவதாவது தொடராக இது அமைந்துள்ளது. 1955 முதல் சுவிஸ் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. சுவிட்சர்லாந்திலுள்ள பேசல் நகரில் இந்த போட்டிகளை நடைபெறுகின்றன.

இந்த தொடரில் இதுவரை இந்தியா ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3, ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஒன்று என மொத்தம் 7 முறை பதக்கம் வென்றுள்ளது.