FIFA worldcup: செனகலிடம் தோல்வி!முதல் அணியாக வெளியேறிய தொடரை நடத்தும் கத்தார்
பிபா உலகக் கோப்பை தொடரை நடத்தி வரும் கத்தார் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை பெற்று வெளியேறியுள்ளது. அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு ஆறுதல் வெற்றியை பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
பிபா உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவை சேர்ந்த கத்தார் - செனகல் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. கத்தார் அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் அந்த அணி தோல்வியை தழுவியது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்தப் போட்டியில் முதல் பாதியில் செனகல் வீரர் பவுலே தியா, ஆட்டத்தின் 41வது தனது அணிக்கு முதல் கோல் அடித்தார். இதையடுத்து முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்று முன்னிலை பெற்ற செனகல் அணிக்கு, இரண்டாம் பாதி தொடங்கி ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் பமராவால் இரண்டாவது கோல் கிடைத்தது.
இதனால் கத்தார் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ச்சியாக கோல் அடிக்க முயற்சித்த கத்தார் அணிக்கு ஆட்டத்தில் 78வது நிமிடத்தில் முதல் கோல் கிடைத்தது. அணியினருக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முகமது முந்தாரி கோல் அடித்தார்.
இருப்பினும் ஒரு கோல் முன்னிலை பெற்றிருந்த செனகல் அணியை சேர்ந்த வீரரான தியெங் தனது அணிக்கு 3வது கோல் அடித்தார். இதனால் 3-1 என முன்னிலை பெற்றது செனகல். பின்னர் முழு ஆட்ட நேரம் முடியும் வரை கோல் அடிக்க தவறிய கத்தார் அணி தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் தொடரை நடத்தும் நாடான கத்தார், முதல் அணியாக அடுத்த சுற்று வாய்ப்பை பெறாமல் வெளியேறியுள்ளது.
கடந்த ஞாயிற்றுகிழமை பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் தொடக்க நாளில் ஈகுவேடார் அணிக்கு எதிரான போட்டியில் 0-2 என தோல்வியை தழுவியது கத்தார். இதைத்தொடர்ந்து செனகல் அணிக்கு எதிராக கட்டாய வெற்றி பெற வேண்டிய போட்டியில் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
இதன்மூலம் அடுத்தடுத்து 2 தோல்விகளுடன் வெளியேறிய நிலையில் கத்தார் நாட்டு ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கத்தார் தனது கடைசி போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
டாபிக்ஸ்