Fifa world cup 2022: நடப்பு சாம்பியன் பிரான்ஸை வீழ்த்திய துனிசியா
குரூப் டி பிரிவில் இடம்பெற்று துனிசியா அணி சாம்பியன் அணியான பிரான்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் அணியாக நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் துனிசியாவை எதிர்கொண்டது. விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு டிரா, ஒரு தோல்வி என இருந்து துனிசியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெற முடியாத சூழ்நிலையில் இருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஏனென்றால் குரூப் டி பிரிவில் ஏற்கனவே இரண்டு வெற்றிகளுடன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. இதனால் சம்பிரதாய போட்டியாக அமைந்திருந்த இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் களமிறக்கப்படவில்லை.
இதனால் முழு பலத்துடன் இல்லாத பிரான்ஸ் அணியை எதிர்கொண்ட துனிசியா தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தும் விதமாக விளையாடியது. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே துனிசியாவுக்கு கோல் கிடைக்க, அது ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டது.
இந்த கோல் வாய்ப்பு பறிபோன பிறகு அடுத்ததாக முதல் பாதி நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து இரண்டாம் பாதியிலும் கோல் அடிக்கும் முயற்சியை பிரான்ஸ், துனிசியா அணிகள் தொடர்ந்தன. இதில் ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் துனிசியாவுக்கு முதல் கோல் கிடைத்தது. அந்த அணி வீரர் வாபி காஸ்ரி என்பவர் தனது அணிக்காக முதல் கோல் அடித்தார்.
அத்துடன் இந்த உலகக் கோப்பை தொடரில் துனிசியா அணியின் முதல் கோலாகவும் இது அமைந்தது. இதன் பின்னர் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய துனிசியா பிரான்ஸ் வீரர்கள் தங்களது வளையத்துக்குள் வரவிடாமல், அவர்கள் கோல் அடிக்கும் முயற்சியையும் தடுத்தனர்.
90 நிமிடங்கள் முடிந்த பின்னர் 1-0 என துனிசியா முன்னிலை வகித்த நிலையில், 8 நிமிடங்கள் விரய நேரமாக கொடுக்கப்பட்டது. இதில் ஆட்டம் முடிவதற்கு சில விநாடிகளே இருந்தபோது பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் கோல் அடித்தார். ஆனால் சந்தேகத்தின்பேரில் ரீப்ளே பார்த்தபோது துர்தர்ஷ்டவசமாக அது ஆஃப் சைடு கோல் ஆனது.
இதன்மூலம் துனிசியா உலக சாம்பியனான பிரான்ஸை 1-0 என கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடரை விட்டு வெளியேறியது.
டாபிக்ஸ்