அயர்லாந்து அணியின் பினிஷர் கெவின் ஓ பிரையன் ஓய்வு அறிவிப்பு
உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர்கள் மறக்க வேண்டிய கெட்ட கனவாக கெவின் ஓ பிரையன்வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம் அமைந்தது. அயர்லாந்துக்கு எதிரான அந்த லீக் போட்டியில் பெற்ற தோல்வி இங்கிலாந்தின் நாக் அவுட் வாயப்பை பறிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது.
உலகக் கோப்பையைில் கத்துக்குட்டி அணிகள் திடீர் விஸ்வரூபம் எடுத்து டாப் அணியை மட்டுமல்லாமல், கிரிக்கெட் ரசிகர்களையும் அப்செட் செய்யும் சம்பவங்கள் காலகாலமாக நடைபெற்று வருகிறது. இதற்கு சிறந்த உதாரணமாக இந்தியாவே உள்ளது. 1983ஆம் ஆண்டு ஜாம்பவான் அணியான வெஸ்ட்இண்டீஸை வீழ்த்தி உலகக் கோப்பை வென்றபோது இந்தியா வளர்ந்து வரும் அணியாகவே இருந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த வகையில் பிரிட்டனின் ஒரு பகுதியாக இருக்கும் அயர்லாந்து அணி விளையாடிய இரண்டாவது உலகக் கோப்பை தொடரில் கிரிக்கெட்டில் மூத்த அணியான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. அதுவும் 327 ரன்கள் சேஸ் செய்து அபார வெற்றி பெற்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு மறக்க முடியாத வலியை கொடுத்தது.
அந்தப் போட்டி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அயர்லாந்து பேட்ஸ்மேன், அணியின் பினிஷர் என்று கூறப்படும் கெவின் ஓ பிரையன். உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதத்தை அடித்து, இங்கிலாந்தை வீழ்த்தியதோடு அவர்களின் நாக்அவுட் சுற்று வாய்ப்பையும் தகர்த்தார்.
அந்த ஆட்டத்தில் 63 பந்துகளில் 113 ரன்கள் எடுத்து அணியை வரலாற்று வெற்றி பெற செய்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கெவின் ஓ பிரையன், இந்தியாவுக்கு தோனி எப்படி இருந்தாரோ அதை அப்படியே அயர்லாந்து அணிக்காக 16 ஆண்டுகள் செய்து வந்துள்ளார்.
இக்கட்டான நேரத்தில் பார்னர்ஷிப் அமைப்பது, ரன் தேவைப்படும்போது அதிரடி காட்டுவது என ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தக்கவமைத்து கொண்டு விளையாடி வந்த கெவின் ஓ பிரையன் தற்போது சர்வதேசி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு அயர்லாந்து அணியில் அறிமுகமான அவர், இதுவரை டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மொத்தம் 266 போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 5,850 ரன்கள் அடித்துள்ள இவர் மூன்று வகை போட்டிகளில் சதம் விளாசியுள்ளார்.
வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமில்லாமல் பேட்டிங் ஆல்ரவுண்டராக ஜொலித்த இவர் 172 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது 38 வயதாகும் கெவின் ஓ பிரையன் தனது ஓய்வு குறித்து டுவிட்டரில் அறிவித்தார். அதில், "எனது 16 ஆண்டு கால பயணத்துக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறேன். ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்ய விரும்பினேன். ஆனால் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிக்கு பிறகு நான் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அணி நிர்வாகம் வேறு திட்டத்தை வைத்து இருப்பதாக உணருகிறேன். நாட்டுக்காக களம் கண்ட ஒவ்வொரு விநாடியும் உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். எனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர இது சரியான தருணமாகும். எனக்கு சொந்தமான கிரிக்கெட் பயிற்சி அகாடமியை தொடர்ந்து மேம்படுத்த விரும்புகிறேன்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்து அணியை உலக அளவில் ரசிகர்களை உருவாக்கியதில் கெவின் ஓ பிரையன் ஆட்டம் பெரும் பங்கு வகித்தது என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் அவர் சமீப காலமாக அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் தற்போது ஓய்வை அறிவித்துள்ளார்.