Katchatheevu island row: ‘கச்சத்தீவு தீவில் யார் வசிக்கிறார்கள்?’ திக்விஜய் சிங் கேள்வி: கங்கனா ரனாவத் பதில்
Digvijaya Singh on Katchatheevu island: தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டு, கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் வழங்கியது என்று கூறிய நிலையில் திக்விஜய் இவ்வாறு கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள கச்சத்தீவு விவகாரம் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் புதன்கிழமை இந்த விவகாரத்தை 'முட்டாள்தனம்' என்று கூறியதுடன், "அந்த தீவில் யார் வசிக்கிறார்கள்? இந்தக் கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜகவைச் சேர்ந்தவரும், நடிகையுமான கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அங்கு சென்று கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விவகாரம் குறித்து பேசியபோது, திக்விஜய் சிங், "மோடிஜி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல் முட்டாள்தனமாக பேசுகிறார்" என்று கூறினார்.
தமிழகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தை மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டு, கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் வழங்கியது என்று கூறிய நிலையில் திக்விஜய் இவ்வாறு கூறினார். யாருடைய நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது? இது குறித்து காங்கிரஸ் மவுனம் காத்து வருகிறது. அந்த தீவுக்கு அருகில் சென்ற ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதுபோன்ற மீனவர்களை தொடர்ந்து விடுவித்து மீண்டும் அழைத்து வருகிறது. அதுமட்டுமின்றி, 5 மீனவர்களுக்கு மரண தண்டனை விதித்தும், அவர்களை உயிருடன் கொண்டு வந்தேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களின் குற்றவாளிகள் மட்டுமல்ல, நாட்டின் குற்றவாளிகளும் கூட" என்று மோடி புதன்கிழமை கூறினார்.
'இந்த மனநிலை...': கங்கனா ரனாவத் பதிலடி
நடிகையும், இமாச்சல பிரதேசத்தில் பாஜக மக்களவை வேட்பாளராக நிற்பவருமான கங்கனா ரனாவத், திக்விஜய் சிங்கின் கருத்துக்குப் பதிலளித்தார், “இந்த மனநிலை காரணமாக, காங்கிரஸ் ஆட்சியின் கீழ் நாட்டின் தொலைதூர பகுதிகளில் வளர்ச்சி ஏற்பட முடியாது” என்று கூறினார். இதுகுறித்து கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில், "Aksai Chin a barren land என்று அழைக்கும் நேருவின் சிந்தனை இன்னும் காங்கிரஸில் உயிர்ப்புடன் உள்ளது.
ஆனால் இது ஒரு புதிய இந்தியா, அங்கு குழாய் நீர் நாட்டின் மிக உயர்ந்த வாக்குச்சாவடியான 'தாஷிகாங்'கை அடைகிறது, இமாச்சல பிரதேசத்தில் உள்ள 'கோமிக்' போன்ற உயரமான கிராமங்கள் சிறந்த சாலை இணைப்பைக் கொண்டுள்ளன, ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரம் ஒளிரும். நாட்டின் புவியியல் ஒருமைப்பாட்டுடன் எந்த சமரசமும் இருக்காது, அத்தகைய சிந்தனை உள்ளவர்களுக்கு நாடு நிச்சயமாக பதிலடி கொடுக்கும்" என்று கங்கனா ரணாவத் குறிப்பிட்டார்.
முன்னதாக, கச்சத்தீவு தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ தாக்கல் செய்தார். அதில், இந்தியா -இலங்கை இடையிலான உறவுகளை பேணுவதற்கு 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போது ஆட்சியமைத்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு 163 ஏக்கர் கொண்ட கச்சத்தீவு நிலத்தை இலங்கைக்கு வழங்கியது.
கடந்த சில மாதங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் காங்கிரசை நோக்கி கச்சத்தீவு தொடர்பான பிரச்னையை எழுப்பினார்.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திலும் கச்சத்தீவு விவகாரம் எதிரொலித்து வருகிறது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கும் ராமேஸ்வரம் அருகே கச்சத்தீவு உள்ளது. இந்த தீவு பகுதிகளை இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், 1974ஆம் ஆண்டு இந்திய - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் மூலம் அந்த 163 ஏக்கர் தீவை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது. இந்த தீவு தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றம் நிலவி வந்ததால், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது. நட்புறவின் சின்னமாக கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
