48 மணி நேர பேச்சு வார்த்தை.. மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா.. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  48 மணி நேர பேச்சு வார்த்தை.. மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா.. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி?

48 மணி நேர பேச்சு வார்த்தை.. மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா.. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Published May 10, 2025 07:17 PM IST

பிரதமர் மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கடந்த 48 மணி நேரம் செலவிட்டதாக மார்கோ ரூபியோ சனிக்கிழமை தெரிவித்தார்.

48 மணி நேர பேச்சு வார்த்தை.. மத்தியஸ்தம் செய்த  அமெரிக்கா.. இந்தியா - பாகிஸ்தான் போர். நிறுத்தம் சாத்தியமானது எப்படி?
48 மணி நேர பேச்சு வார்த்தை.. மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா.. இந்தியா - பாகிஸ்தான் போர். நிறுத்தம் சாத்தியமானது எப்படி? (Bloomberg)

மகிழ்ச்சி அடைகிறேன்

இந்த போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டு இருக்கும் எக்ஸ் பதிவில், ‘நீண்ட இரவாக அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழு மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பொது அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திய இரு நாடுகளுக்கும் வாழ்த்துகள்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

தாக்குதல் தொடக்கம்

கடந்த மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி போர் நிறுத்தம் செய்வதற்கு ஒப்புக்கொண்டன- மார்கோ ரூபியோ

பாகிஸ்தான் - இந்தியா இடையேயான போர் பதற்றம் அதிகரித்த்தை தொடர்ந்து நிலமையை எளிதாக்க அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ ஆரம்பத்தில் இருந்தே மத்தியஸ்தம் செய்து வந்தார்.

இந்த நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் எவ்வாறு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

சாத்தியமானது எப்படி?

இந்த அறிவிப்பு குறித்து மார்கோ ரூபியோ தன்னுடைய எக்ஸ் தளத்தில், ‘வான்ஸும், நானும் பிரதமர்கள் நரேந்திர மோடி மற்றும் ஷெபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அஜித் தோவல் மற்றும் அசிம் மாலிக் உள்ளிட்ட மூத்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம்.

இந்த கலந்துரையாடலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்கள் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும், நடுநிலையான இடத்தில், பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தைகளைத் தொடங்கு இருப்பதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுப்பதில் பிரதமர்கள் மோடி மற்றும் ஷெரீப்பின் ஞானம், விவேகம் மற்றும் அரசியல் திறமையை நாங்கள் பாராட்டுகிறோம்.’ என்று பதிவிட்டு இருந்தார்

அடிப்படையில் நமக்கு சம்பந்தமில்லாதஒரு மோதலில் அமெரிக்கா தலையிடாது என்று முன்னதாக கூறியிருந்த அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸும் ட்ரம்பின் பதிவை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

டிரம்பின் அறிவிப்புக்குப் பின்னர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தன்னுடைய எக்ஸ் தளத்தில் கூறுகையில், ‘பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன.

பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது!’ என்று பதிவிட்டு இருக்கிறது.

இந்த அறிவிப்பு தொடர்பாக செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் இன்று பிற்பகல், இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அந்தப் பேச்சு வார்த்தையில் இன்று மாலை 5 மணியில் இருந்து அனைத்து தரை, வான் மற்றும் கடல் துப்பாக்கிச் சூடுகளும் நிறுத்தப்படும் என்று இரு தரப்பினரும் முடிவு செய்து இருக்கிறோம். இரு தரப்பினரும் மே 12 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.’ என்று பேசினார்.