‘முதலமைச்சர் ஏற்றதாக சொன்னீர்களே..?’ கனிமொழி எம்.பி.,யிடம் தர்மேந்திர பிரதான் வாக்குவாதம்!
‘‘என்னுடைய சகோதரி, இரு விசயத்தை குறிப்பிட்டிருந்தார். முதல் விசயம், நான் விமர்சனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு. நான் அதை குறிப்பிட்டிருக்க கூடாது, நான் என் வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். என் வார்த்தை யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு வருந்துகிறேன்’’

தேசிய கல்விக் கொள்ளை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக எம்.பி., அமளியில் ஈடுபட்டதால் 15 நிமிடங்கள், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் மக்களவை கூடியதும், திமுக எம்.பி., கனிமொழி பேச எழுந்தார். அப்போது அவர் பேசியதாவது:
தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்
‘‘இன்று எனக்கு துயரமாக இருக்கிறது. அமைச்சர் பதிலளிக்கும் போது தமிழக அரசாங்கத்தை நாகரீகமற்றவர்கள் என்று கூறியிருக்கிறார். அவைத் தலைவர் அவர்களே , நீங்கள் என் பெயரையும் குறிப்பிட்டீர்கள். நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். உண்மை என்னவென்றால், நான் அமைச்சரை சந்தித்திருக்கிறேன். அது தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பாகத் தான். அந்த சந்திப்பில் மாநில அமைச்சரும் இருந்தார்கள். தேசிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு பிரச்னை இருக்கிறது என்று கூறியிருக்கிறோம். மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், உண்மை என்னவென்று சொன்னால், முதலமைச்சர் அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.