Tamilisai Resigns Governor Post: தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் பதவியில் இருந்து விலகல் - பின்னணி என்ன?
Tamilisai Resigns Governor Post: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தெலங்கானா ஆளுநர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதை அடுத்து, 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளார்.
Tamilisai Resigns Governor Post: தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை செளந்தரராஜன் மார்ச் 18அன்று ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்து, அது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கடிதம் அளித்துள்ளார். ராஜினாமா கடிதம் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது’’எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஹைதராபாத்தில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தபின், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன்,'' மக்களுக்காக பணி செய்ய மகிழ்ச்சியுடன் செல்கிறேன். தெலங்கானா மக்களுக்கு மிக்க நன்றி''எனத் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த ராஜினாமா நடந்துள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019ஆம் ஆண்டில், தமிழிசை சௌந்தரராஜன் தென் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மக்களவைத்தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். ஆனால், அப்போது திமுகவின் முக்கிய அரசியல் வாரிசுகளில் ஒருவரான கனிமொழி கருணாநிதியிடம் தோல்வியடைந்தார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றார். பின்னர் 2021 பிப்ரவரியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக-காங்கிரஸ் கூட்டணி, தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு செய்த தேர்தல் பணியை இந்தமுறையும் செய்ய முயற்சிக்கும் எனத் தெரிகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ஆம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும்.மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி, தென்சென்னை, கன்னியாகுமரி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தென்சென்னை தொகுதி:
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவ் அரசியலில் இருக்கும் தமிழிசை செளந்தரராஜன், இதுவரை போட்டியிட்ட ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியை குறி வைத்த நிலையில் அது கூட்டணியில் இருந்த அதிமுகவின் ஜெயவர்தனுக்கு சென்றதால் வேறு வழியின்றி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் அவரது தோல்விக்கு காரணங்களாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தென் சென்னை மக்களவைத் தொகுதி அவருக்கு சாதகமானதாக இருக்கும் என கருதப்படுகிறது.