AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் தடை
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
புதுதில்லி: ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ட்ரெண்டிங் செய்திகள்
எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து தசரா விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஆலோசனை தெரிவித்தனர்.
அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுக நிர்வாகிகள் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தலை நடத்த தயாராகி வருகின்றனர். எனவே, வழக்கு விசாரணைக்கு வரும்வரை தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். அல்லது, தற்போதைய நிலையே தொடர உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இபிஎஸ் தரப்பிடம், தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக நீங்கள்தானே இருக்கிறீர்கள், பிறகு தேர்தலை நடத்துவதற்கு என்ன அவசரம்? என்று கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உத்தரவாதம் அளித்தது. இதை பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், இபிஎஸ் தரப்பு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
டாபிக்ஸ்