New Parliament Building: நமது நாடாளுமன்றக் கட்டிடம் பழையதாகிவிட்டதா? ஆதாரங்களுடன் பாஜகவை சீண்டிய சுமந்த் சி ராமன்!
பணத்தால் கட்டியெழுப்பக்கூடிய அனைத்து ஆடம்பரமான செல்வங்களையும் விட வரலாற்றில் மிகப்பெரிய மகத்துவம் உள்ளது என சுமந்த் சி ராமன் ட்வீட்
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், அது குறித்த பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விவாதங்கள் அடுத்தடுத்து எழுந்து வருகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்காதததையும், குடியரசு தலைவரை புறக்கணித்துவிட்டு பிரதமர் மோடி கட்டடத்தை திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் திறப்பு விழா நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக 19 காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டனர்.
இந்த நிலையில் 19 எதிர்க்கட்சிகளின் முடிவுக்கு எதிராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இணைந்து கண்டன அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த நிலையில் ஸ்ரத்தன்மையில் எந்தவித பாதிப்பையும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் அடையாத நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடம் ஏன் என்ற கேள்வி சமூகவலைத்தலங்களில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற கட்டடம் குறித்த பதிவு ஒன்றை அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் வெளியிட்டுள்ளார். அதில், நமது நாடாளுமன்றக் கட்டிடம் பழையதாகிவிட்டது (1921) என்று சொல்பவர்களுக்கு இதோ சில சுவாரஸ்யமான தகவல்கள்.
இங்கிலாந்து பாராளுமன்ற கட்டிடம், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை முதன்முதலில் 11 ஆம் நூற்றாண்டில் (1016 முதல்) கட்டப்பட்டது.
ஜெர்மனியில் உள்ள ரீச்ஸ்டாக் முதன்முதலில் 1880 களில் கட்டப்பட்டது.
அமெரிக்க காங்கிரஸ்-கேபிடல் கட்டிடம் 1793 இல் கட்டப்பட்டது.
பிரெஞ்சு பாராளுமன்ற கட்டிடம் முதன்முதலில் 1722 இல் கட்டப்பட்டது.
இந்த நாடுகள் அனைத்தும் தனி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டவில்லை. அவர்கள் தற்போதுள்ள வரலாற்று கட்டமைப்புகளை அவ்வப்போது புதுப்பித்து, புனரமைத்தனர் அல்லது விரிவுபடுத்தினர்.
இந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில் அசல் கட்டிடங்களின் ஒரு பகுதியாவது எஞ்சியிருக்கிறது, அவர்களின் மக்களுக்கு வரலாற்றின் உணர்வைக் கொடுக்கிறது மற்றும் காலச் சூழலில் அவை எவ்வளவு சிறியவை என்பதை அங்கு பணியாற்றும் அரசியல்வாதிகளுக்கு நினைவூட்டுகின்றன.
பணத்தால் கட்டியெழுப்பக்கூடிய அனைத்து ஆடம்பரமான செல்வங்களையும் விட வரலாற்றில் மிகப்பெரிய மகத்துவம் உள்ளது என சுமந்த் சி ராமன் ட்வீட் செய்துள்ளார்.