Rameshwaram cafe: பெங்களூரு ஹோட்டலில் வெடித்தது வெடிகுண்டுதான்’ முதல்வர் சித்தராமையா அறிவிப்பு!
ராமேஸ்வரம் கஃபே வெள்ளிக்கிழமை மதியம் வெடித்தது குண்டுவெடிப்பு என்பதை சித்தராமையா உறுதிப்படுத்தினார்.

பெங்களூருவில் புகழ்பெற்ற உணவகமான ராமேஸ்வரம் கஃபேவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு மூலம் நிகழ்ந்தது என்பதை கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.
மத்திய பெங்களூரு பகுதியில் இயங்கி வரும் பிரபலமான ஓட்டலில் குண்டுவெடிப்பு நடந்த சம்பவம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, ஓட்டலில் யாரோ ஒரு பையை வைத்திருந்தனர். அது வெடித்ததில் சிலர் காயமடைந்தனர். "நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்கிறோம். இது ஒரு வெடிகுண்டு வெடிப்பு. இதை யார் செய்தார்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்தில் உள்ளனர். நிலைமையை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்" என்று சித்தராமையா கூறினார்.
இது அதிவெடிகுண்டு அல்ல, குண்டுவெடிப்புக்குப் பிறகு தனது முதல் எதிர்வினையில், அதில் அரசியல் வேண்டாம் என்றும் சித்தராமையா கூறி உள்ளார். மேலும் இந்த சாதனம் வாடிக்கையாளர் ஒருவரின் பையில் வைக்கப்பட்டிருந்ததை முதலமைச்சர் சித்தராமையா உறுதிப்படுத்தி உள்ளார்.
முன்னதாக இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் கபேயில் பணிபுரியும் ஒரு பாதுகாவலர் கூறுகையில், "நான் கஃபேவுக்கு வெளியே நின்று கொண்டிருந்தேன். ஹோட்டலுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். திடீரென பலத்த சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டது, இதனால் ஹோட்டலுக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் காயமடைந்தனர் என கூறி உள்ளார்.
பெங்களூருவின் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து பாஜக தலைவர் பி.சி.மோகன் கவலை தெரிவித்ததோடு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு மத்திய தொகுதி பாஜக எம்.பி., பி.சி.மோகன் வெளியிட்டுள்ள பதிவில், "பெங்களூரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேயில் மர்மமான குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கேள்விப்பட்டது கவலையளிக்கிறது. விசாரணை நடத்தி அனைத்து குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
மேலும், பெங்களூரு தெற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கூறுகையில், ஒரு வாடிக்கையாளர் அதன் வளாகத்தில் ஒரு பையை விட்டுச் சென்றதால் குண்டுவெடிப்பு ஏற்பட்டதாக கஃபே நிறுவனர் தன்னிடம் தெரிவித்தார். பெங்களூரு மக்கள் முதல்வர் சித்தராமையாவிடம் பதிலைக் கோருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
