Women Reservation: ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் ராஜிவ் காந்தியின் கனவு நிறைவேறும்: சோனியா நெகிழ்ச்சி!
”உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் பங்கேற்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை முதன்முறையாக கொண்டு வந்தவர் எனது வாழ்க்கைத் துணைவர் ராஜீவ் காந்தி, ஆனால் அது ராஜ்யசபாவில் ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது”
நாடாளுமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 19) தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அதில், இது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான தருணம். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் பங்கேற்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை முதன்முறையாக கொண்டு வந்தவர் எனது வாழ்க்கைத் துணைவர் ராஜீவ் காந்தி, ஆனால் அது ராஜ்யசபாவில் ஏழு வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர். பிரதமர் பிவி நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றியது என சோனியா காந்தி குறிப்பிட்டார்.
இன்று, அதன் விளைவாக, நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 லட்சம் பெண் தலைவர்கள் உள்ளனர். ராஜீவ் காந்தியின் கனவு பாதிதான் நிறைவேறியுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம் அது நிறைவேறும். இந்த மசோதாவை காங்கிரஸ் ஆதரிக்கிறது என சோனியா காந்தி கூறினார்.
மகளிர் இட ஒதுக்கீடு சட்டம்
புதிய நாடாளுமன்றம் கூடிய முதல் நாளிலேயே முதலாதவதாக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவாக மகளிர் இட ஒதுகீடு மசோதா உள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம் செய்த பின்னரே இடஒதுக்கீடு அமலுக்கு வரும்.
மகளிர் இட ஒதுக்கீடு சட்ட வரலாறு
ராஜீவ் காந்தி முதன்முதலில் பஞ்சாயத்துகள் மற்றும் நகரபாலிகாக்களில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை 1989ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தினார். இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் செப்டம்பர் 1989ஆம் ஆண்டில் ராஜ்யசபாவில் தோல்வியடைந்தது.
பின்னர், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் காலத்தில் ஏப்ரல் மாதம் 1993ஆம் ஆண்டு பஞ்சாயத்துகள் மற்றும் நகர்பாலிகாக்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கான அரசியலமைப்பு திருத்த மசோதாக்களை மீண்டும் அறிமுகப்படுத்தினார். இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு சட்டமானது குறிப்பிடத்தக்கது.