Budget 2023-24: பட்ஜெட் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் பிடிஆர் வைத்த கோரிக்கைகள் என்ன?
டெல்லி: தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 11 ஆயிரத்து 185 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
வரும் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடந்தது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று உரையாற்றினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அப்போது பேசிய அவர், " ரஷ்யா-உக்ரைன் போரால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற உலகப் பொருளாதார சூழ்நிலை மற்றும் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில், கூட்டுறவு மற்றும் நிதி கூட்டாட்சி கொள்கைகளை மேம்படுத்துவதில் இந்த சந்திப்பு முக்கியமானது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். மத்திய அரசின் செஸ் மற்றும் கூடுதல் வரி விதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது நிதி கூட்டாட்சி முறைக்கு எதிரானது. கொரோனா பெருந்தொற்றால் மாநிலத்தின் வருவாய் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை. எனவே, தமிழகத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான 11 ஆயிரத்து 185 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை குறைந்தது 2 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. இந்த இடைவெளியை களைய வேண்டும். சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பங்களிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய ரயில்வே திட்டங்கள் வழங்க வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.