Atal Bihari Vajpayee: வாஜ்பாய் நினைவு நாள் - குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாளையொட்டி குடிரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
புதுதில்லி: முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வயது மூப்பு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது நான்காவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
நினைவு நாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இவர்களைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் சதைவ் அடல் என்ற வாஜ்பாயின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் 1924ஆம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் வாஜ்பாய். பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அரசியலில் நுழைந்த அவர், 9 முறை மக்களவை உறுப்பினராகவும், 2 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.
வாஜ்பாய் இந்திய பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். முதல் முறையாக 1996ஆம் ஆண்டு 13 நாள்களும், அதன் பின்னர் 1998 முதல் 1999ஆம் ஆண்டு வரை 13 மாதங்களும் பிரதமராக இருந்தார். அதைத்தொடர்ந்து 1999 முதல் 2004ஆம் ஆண்டு வரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தான் தங்க நாற்கர சாலை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும், இவரது ஆட்சிக் காலத்தில் தனியார் துறை மற்றும் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது, நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பாரத ரத்னா உள்ளிட்ட விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் 93 வயதில் மறைந்தார். அவருடைய பிறந்தநாளான டிசம்பர் 25, நாடு முழுவதும் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது.
டாபிக்ஸ்