மோடி-கார்னி சந்திப்பு: இந்தியா-கனடா உறவில் புதிய திருப்பம் வருமா? எதிர்பார்ப்புகள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மோடி-கார்னி சந்திப்பு: இந்தியா-கனடா உறவில் புதிய திருப்பம் வருமா? எதிர்பார்ப்புகள் என்னென்ன?

மோடி-கார்னி சந்திப்பு: இந்தியா-கனடா உறவில் புதிய திருப்பம் வருமா? எதிர்பார்ப்புகள் என்னென்ன?

Karthikeyan S HT Tamil
Published Jun 18, 2025 01:42 PM IST

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மோடி-கார்னி சந்திப்பு: இந்தியா-கனடா உறவில் புதிய திருப்பம் வருமா? எதிர்பார்ப்புகள் என்னென்ன?
மோடி-கார்னி சந்திப்பு: இந்தியா-கனடா உறவில் புதிய திருப்பம் வருமா? எதிர்பார்ப்புகள் என்னென்ன?

கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நட்பை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் அருமையான சந்திப்பு இருந்தது. ஜி 7 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள கனடா அரசுக்கு வாழ்த்துக்கள். இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. பிரதமர் கார்னியும், நானும் இணைந்து இந்தியா-கனடாவுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்." எனப் பதிவிட்டுள்ளார்.

மோடி, கார்னி சந்திப்பு குறித்து கனடாவிற்கான முன்னாள் இந்திய தூதர் அஜய் பிசாரியா கூறுகையில், இந்த ஆண்டு முறிந்த அரசியல் உறவை இயல்பாக்குவதற்கு ஒரு நடைமுறை அணுகுமுறையை இரு நாடுகளும் பின்பற்றி உள்ளன. ஜி7 மாநாட்டின் இடையே, இரு நாட்டு பிரதமர்களும் உறவை புதுப்பிக்க ஒரு சந்திப்பை நிகழ்த்தியுள்ளனர். இதன் மூலம் வலுவான பொருளாதார உறவுகள் அரசியல் உறவுகளை மேம்படுத்தும்.இது உறவுகளை படிப்படியாக நிலைப்படுத்தவும், பின்னர் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களால் வழிநடத்தப்பட்டு, எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்பான ஒரு சிறந்த கூட்டாண்மையை உருவாக்கவும் உதவும் என்று பிசாரியா கூறினார்.

ஆசியா-பசிபிக் அறக்கட்டளையின் கனடா துணைத் தலைவர் வினா நஜிபுல்லா கூறுகையில், இரு நாடுகளும் பொருளாதார மற்றும் மூலோபாய கூட்டாண்மைகளை பல்வகைப்படுத்த விரும்பும் நேரத்தில், உறவை புதுப்பிக்கவும், ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் இரு தலைவர்களிடமிருந்து ஒரு தெளிவான சமிக்ஞை கிடைத்தது நல்லது. இந்த சந்திப்பு ஒரு முக்கியமான தருணம் என்றும், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் பின்தொடர் நடவடிக்கைகளுக்கு இது ஒரு அடித்தளத்தை அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

கனடா-இந்தியா அறக்கட்டளையின் தலைவர் ரிதேஷ் மாலிக் கூறுகையில், இது முக்கியமான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கலாம். “பரஸ்பர மரியாதை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை இந்த உறவு மேலும் வளரக்கூடிய அடித்தளமாகும்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, 2023-ல் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான விரிசல் ஏற்பட்டது. 2023-ல், அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய முகவர்களுக்கும், நிஜ்ஜார் கொலைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்பகமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக கூறினார். இந்திய அரசு இந்த குற்றச்சாட்டை "அபத்தமானது" மற்றும் "தூண்டுதலானது" என்று நிராகரித்தது. கடந்த ஆண்டு இந்த கொலை தொடர்பாக நான்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சூழலில் பிரதமர் மோடியும், கனடா பிரதமர் கார்னியும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.