State Funds: 'மாநிலங்களுக்கான வரி வருவாயை குறைக்க நிதி கமிஷனை நிர்பந்தித்தார் பிரதமர் மோடி'-வெளியான பகீர் தகவல்
"பிரதமர் மோடி அரசாங்கம் தனது முதல் முழு பட்ஜெட்டை 48 மணி நேரத்தில் அவசரமாக மறுசீரமைத்தது. மேலும், மத்திய வரிகளில் பெரும்பகுதியை தக்கவைத்துக்கொள்ளும் அதன் அனுமானம் வெளியேறாததால், நலத்திட்டங்களுக்கு நிதியுதவியை குறைத்தது."

‘பிரதமராக பதவியேற்றதும் மாநிலங்களுக்கான வரி வருவாயின் அளவைக் குறைக்க நிதி கமிஷனை நிர்பந்திக்க மோடி முயன்றார்’ என NITI ஆயோக்கின் CEO பி.வி.ஆர்.சுப்ரமணியம் கூறியதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அல்ஜஸீரா வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
"2014-ல் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற உடன், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை கணிசமாகக் குறைக்க இந்திய நிதி கமிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், மத்திய வரிகளிலிருந்து மாநிலங்களின் பங்குகளை தீர்மானிக்கும் சுயாதீன அரசியலமைப்பு அமைப்பான நிதி கமிஷன் இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து பிரதமர் மோடி பின்வாங்க வேண்டியதாயிற்று.
அத்துடன், மோடி அரசாங்கம் தனது முதல் முழு பட்ஜெட்டை 48 மணி நேரத்தில் அவசரமாக மறுசீரமைத்தது. மேலும், மத்திய வரிகளில் பெரும்பகுதியை தக்கவைத்துக்கொள்ளும் அதன் அனுமானம் வெளியேறாததால், நலத்திட்டங்களுக்கு நிதியுதவியை குறைத்தது.
அதே நேரத்தில், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய வரிப் பங்குகள் குறித்த நிதி கமிஷனின் பரிந்துரைகளை வரவேற்பதாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பொய்யாகக் கூறினார்.
மத்திய பட்ஜெட் தயாரிப்பில் நிதி பேரம் மற்றும் திரைக்குப் பின்னால் நடந்தது பற்றிய இந்த தகவல்கள் அரசாங்க சிந்தனைக் குழுவான NITI ஆயோக்கின் CEO பி.வி.ஆர். சுப்ரமணியத்திடமிருந்து வந்தது. பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த அவர், பிரதமர் மோடிக்கும் நிதி ஆயோக் தலைவர் ஒய்.வி.ரெட்டிக்கும் இடையே நடந்த பின்கதவுப் பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக இருந்தார்.
பிரதமரும் அவரது குழுவும் தொடக்கத்தில் இருந்தே மாநிலங்களின் நிதியைக் குறைக்க முயன்றனர் என்று மாநிலங்களால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டாக இருந்து வரும் நிலையில், தற்போது இந்திய அரசாங்கத்தில் உள்ள ஒரு உயர் அரசு அதிகாரி பகிரங்கமாக அந்தக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளும் வகையில் தகவலை பகிரப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறை ஆகும். தற்போது இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்ற மையம் (சிஎஸ்இபி) என்ற அரசு சாரா சிந்தனைக் குழுவால் கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியாவில் நிதிநிலை அறிக்கை குறித்த கருத்தரங்கில் குழு உறுப்பினராகப் பேசும் போது சுப்ரமணியம் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது கருத்துக்களில் அரசின் வரவு செலவுத் திட்டங்கள் எவ்வாறு "உண்மையை மறைக்கும் முயற்சியின் அடுக்குகளாக உள்ளன" என்பதை அவர் வெளிப்படுத்தினார். இவ்வாறு அரசு அதிகாரி ஒருவர் பகிரங்கமாக தகவலை வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
கணக்குகள் வெளிப்படையாக இருந்தால், அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய கணக்கியல் நடைமுறைகளை கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் எவ்வாறு வெளிப்படுத்தியதோ, அதேபோன்று அரசாங்கத்தின் நிதி நிலையின் உண்மையும் தெளிவாக வெளிப்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
ஒரு தசாப்தத்திற்கு முந்தைய பட்ஜெட் மற்றும் பிற ஆவணங்களுக்கு எதிரான சுப்ரமணியத்தின் கூற்றுக்களை ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் சுயாதீனமாக சரிபார்த்தது.
சுப்ரமணியம் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டத்தில் கையாடல் மற்றும் நிதி மோசடி பற்றிய விவரங்களையும் வெளியிட்டிருந்தார். அதை ஒரு "வேடிக்கையான வழக்கு" என்று அவர் குறிப்பிட்டார்.
இவர் பேசியது YouTube லைவ்ஸ்ட்ரீமில் 500க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் விரிவான கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு (PMO) அனுப்பிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, CSEP யூடியூப் சேனலில் அந்த கருத்தரங்கின் காணொளிக்கான பொது அணுகல் துண்டிக்கப்பட்டது.
சுப்ரமணியம், நிதியமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் தி ரிப்போர்டர்ஸ் கலெக்டிவின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை" இவ்வாறு அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் அரசியல் அரங்கில் விவாதங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்