போர் நிறுத்தம் அறிவித்தும் அத்துமீறும் பாகிஸ்தான்: ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரை பதட்டம்.. 3 மாநிலங்களில் மின் தடை!
இந்தியா-பாகிஸ்தான் இடையே புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே காஷ்மீர் மற்றும் ராஜஸ்தானில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வெடிச்சத்தத்திற்குப் பிறகு ஸ்ரீநகரில் சைரன்கள் ஒலித்தன.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு நிலைமை திடீரென மீண்டும் பதற்றமடைந்தது. தகவல்களின்படி, பாகிஸ்தான் ஜம்மு-காஷ்மீரில் அக்னூர், ராஜோரி மற்றும் ஆர்.எஸ்.புரா சர்வதேச எல்லையில் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. பாரமுல்லாவில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது, அதே நேரத்தில் பலன்வாலா பகுதியிலும் போர் நிறுத்தம் மீறப்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல் செய்திகளுக்குப் பிறகு பல நகரங்களில் முன்னெச்சரிக்கையாக மின்தடை அமல்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க | 48 மணி நேர பேச்சு வார்த்தை.. மத்தியஸ்தம் செய்த அமெரிக்கா.. இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் சாத்தியமானது எப்படி?
ஜம்முவின் உதம்பூர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது, அதே நேரத்தில் ஸ்ரீநகரில் பல சத்தமான வெடிச்சத்தங்கள் கேட்டன. இதையடுத்து நகரம் முழுவதும் மின்தடை செய்யப்பட்டு சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஸ்ரீநகர் மட்டுமல்ல, பாரமுல்லா மற்றும் பட்காமிலும் துப்பாக்கிச் சூட்டுகள் கேட்டன. ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்திலும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அவசரகால மின்தடை அமல்படுத்தப்பட்டது.
ஸ்ரீநகரில் வெடிச்சத்தம், முதல்வர் ட்வீட்
இந்தத் தாக்குதல் குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிருப்தி தெரிவித்தார். "போர் நிறுத்தம் என்ன ஆனது? ஸ்ரீநகரில் வெடிச்சத்தங்கள் கேட்டன" என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். பாகிஸ்தான்-இந்தியா இடையே போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்த அதே நாளில் பாகிஸ்தான் தரப்பில் ஒப்பந்தம் மீறப்பட்டது என்பதுதான் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம்.