'பயங்கரவாதத்தின் மையம் எங்குள்ளது என உலகிற்கு தெரியும்' -பாக்., கூற்றை நிராகரித்த இந்தியா பதிலடி
பாகிஸ்தான் ரயில் கடத்தல்: ஜாபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலில் ஈடுபட்ட பி.எல்.ஏ கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள கும்பல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கூறியது.

பலுசிஸ்தானில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தல் சம்பவத்தில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியதை இந்தியா நிராகரித்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாகிஸ்தான் கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். உலகளாவிய பயங்கரவாதத்தின் மையம் எங்குள்ளது என்பது முழு உலகிற்கும் தெரியும். பாகிஸ்தான் தனது சொந்த உள்நாட்டுப் பிரச்சினைகள் மற்றும் தோல்விகளுக்கான பழியை மற்றவர்கள் மீது மாற்றுவதற்குப் பதிலாக தங்களை தாங்களே சரிபார்க்க வேண்டும்” என்றார்.
முன்னதாக வியாழக்கிழமை, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷப்கத் அலி கான், ஜாபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள தலைவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறினார்.
பாகிஸ்தான் குற்றச்சாட்டு
மேலும், "இந்த சம்பவம் முழுவதும் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட திட்டமிடுபவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தனர். பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு தனது மண்ணைப் பயன்படுத்துவதை மறுக்குமாறு பாகிஸ்தான் பலமுறை ஆப்கானிஸ்தானைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த கண்டிக்கத்தக்க பயங்கரவாத செயலின் குற்றவாளிகள், அமைப்பாளர்கள், நிதியளிப்பவர்கள் பொறுப்பேற்க வேண்டும், பயங்கரவாதத்தின் உண்மையான ஆதரவாளர்கள் உட்பட இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் நீதிக்கு முன் கொண்டு வர பாகிஸ்தான் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் ஆப்கானிஸ்தானை கேட்டுக்கொள்கிறோம்" என்று ஷப்கத் அலி கான் கூறினார்.
'ஆதாரங்கள் உள்ளன'
அவர் மேலும் கூறுகையில், "எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும், உண்மைகள் மாறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது. நான் குறிப்பிட்டது என்னவென்றால், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து அழைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதைத்தான் நான் சொன்னேன்" என்று பதிலளித்தார் ஷப்கத் அலி கான்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியா தனது அண்டை நாடுகளை சீர்குலைக்க முயற்சிக்கிறது மற்றும் உலகளாவிய படுகொலை பிரச்சாரத்தை நடத்தி வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
“எங்கள் பிராந்தியத்தில், துரதிர்ஷ்டவசமாக, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் அமைதியான பிராந்தியத்தை உருவாக்குவதில் பாகிஸ்தான் அதன் நேர்மையான முயற்சிகளை அறுவடை செய்வதைக் காண விரும்பாத அமைதிக்கு எதிரான பல சக்திகள் உள்ளன” என்றார் ஷப்கத் அலி கான்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்திய ஊடகங்கள் பி.எல்.ஏவை பெருமைப்படுத்துகின்றன, இது அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும் சில வழிகளில் இந்தியக் கொள்கையை பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.
400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் கடத்திய 33 பலுசிஸ்தான் விடுதலை இராணுவ (பி.எல்.ஏ) கிளர்ச்சியாளர்களையும் கொன்றதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கூறியதை அடுத்து வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த "வெற்றிகரமான நடவடிக்கை" என்று கூறப்படும் புகைப்படம் அல்லது வீடியோவை பாகிஸ்தான் ராணுவம் வெளியிடவில்லை. ஐ.எஸ்.பி.ஆர் தோல்வியை மூடிமறைப்பதாக கிளர்ச்சியாளர் பி.எல்.ஏ கூறியது.
குவெட்டாவை அடைந்த விடுவிக்கப்பட்ட பயணிகள் பாகிஸ்தான் செய்தி ஊடகத்திடம் கூறுகையில், பி.எல்.ஏ போராளிகள் ரயிலைக் கைப்பற்றிய உடனேயே பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தானாக முன்வந்து விடுவித்தனர் என்று தெரிவித்தனர்.
