'அடுத்த 36 மணி நேரத்தில் எங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம்'.. பாகிஸ்தான் வெளியிட்ட பகீர் தகவல்!
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா விரைவில் இராணுவத் தாக்குதல் நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அட்டவுல்லா தரார் புதன்கிழமை இரவு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், பாகிஸ்தான் மீது அடுத்த 24-36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று “நம்பகமான ஆதாரங்கள்” இருப்பதாகக் கூறினார்.
“பஹல்காம் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி, அடுத்த 24-36 மணி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது என்று நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன” என்று தரார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்றும், ஆனால் அனைத்து வகையான வன்முறையையும் கண்டித்துள்ளது. இருப்பினும், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் இந்தியா தன்னைத்தானே நீதிபதியாகவும், நடுவராகவும், மரண தண்டனை நிறைவேற்றுபவராகவும் நினைத்துக்கொண்டு செயல்படுகிறது என்று தரார் கூறினார்.
