ஆபரேஷன் சிந்தூர் ஏன் அதி அவசரம், முக்கியம்? - 9 முகாம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதின் பின்னணி என்ன?- என்ன சொல்கிறது இந்தியா?
மே 7 ஆம் தேதி அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து ஆபரேஷன் சிந்தூரம் நடத்தியது.

மே 7 தேதியான இன்றைய தினம் இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள (போக்) 9 முக்கிய பயங்கரவாத தளங்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலைத் நடத்தியது. அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை நடந்த தாக்குதலை கடற்படை, விமானப்படை, ஆயுதப்படை ஆகிய முப்படைகள் சேர்த்து நடத்தின.
இந்திய ஆயுதப் படைகளால் குறிவைக்கப்பட்ட ஒன்பது பயங்கரவாத முகாம்களில் முசாபராபாத்தின் சவாய் நாலா முகாம், சையத்னா பெலால் முகாம், குல்பூர் முகாம், அப்பாஸ் முகாம், பர்னாலா முகாம், சர்ஜால் முகாம், மெஹ்மூனா ஜோயா முகாம், மார்கஸ் தைபா மற்றும் பஹவல்பூரில் உள்ள மார்கஸ் சுபான் உள்ளிட்டவை அடங்கும்.
ஆபரேஷன் சிந்தூர் ஏன் தேவை?
ஏப்ரல் 22 நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை பல தசாப்தங்களாக இந்தியாவை பாதித்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான அளவீடு செய்யப்பட்ட பதில் என்று அரசு விவரித்து இருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் ஏன் முக்கியமானது?
இந்திய ராணுவத்தின் கூற்று படி, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை அகற்றுவதற்கான தெளிவான நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், மிகவும் முக்கியமானது.
ஏனெனில், தாக்கப்பட்ட இடங்களில் பாகிஸ்தானால் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட, அதிநவீன பயங்கரவாத உள்கட்டமைப்பு இருக்கிறது. இது நேரடி தாக்குதலை குறிக்கிறது.
இதில் அவர்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் போதனை மையங்கள், ஆயுத பயிற்சி வசதிகள், ஏவுதளங்கள் மற்றும் செயல்பாட்டு தளங்கள் ஆகியவை இருக்கின்றன. இவை அனைத்தும் இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ பயன்படுத்தப்படுகின்றன.
இந்த அமைப்பு பயங்கரவாதத்தை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், வியூகங்கள் மற்றும் இலக்குகளுடன் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கிறது.
இந்த இலக்குகளில் புல்வாமா மற்றும் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயிற்சி மையங்கள் உள்ளிட்ட சில முக்கிய பயங்கரவாத முகாம்களும் அடங்கும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
பஹல்காம், சோன்மார்க் மற்றும் குல்மார்க்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களையடுத்து இந்த உள்கட்டமைப்பை சீர்குலைத்து அகற்றுவதற்கான அவசியம் இன்னும் அவசரமானது; இவை அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் உள்ள முகாம்களில் இருக்கின்றன.
இலக்கு முகாம்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏன்?
ஆபரேஷன் சிந்தூரின் கீழ் கடுமையான புலனாய்விற்கு பிறகே அடையாளம் காணப்பட்டன என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த குறிப்பிட்ட முகாம்கள் அவற்றின் நோக்கத்திற்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கு எதிரான கடந்த கால மற்றும் திட்டமிடப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டதை வைத்தும் அடையாளம் காணப்பட்டன.
ஒவ்வொரு இலக்கு முகாமும் குறிப்பிட்ட தாக்குதல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத குழுக்களின் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதாக அறியப்படுகிறது.
பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை
இதற்கிடையில், ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்ததற்காக இந்தியா தனது ஆயுதப்படைகளைப் பாராட்டியது. மேலும் இராணுவத் தாக்குதல்களின் போது, பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் இலக்குகள் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறி வைத்து அழிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறது.

டாபிக்ஸ்