Lawrence Bishnoi:லாரன்ஸ் பிஷ்னோய் உட்பட 14 பேர் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை!
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை புதிய குற்றப்பத்திரிக்கை ஒன்றை பதிவு செய்திருக்கிறது
பிரபல பாடகர் சித்து மூஸ் பாலா கொலை மற்றும் பல்வேறு கொலைகளில் தொடர்பு உடைய லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோர் மீது தேசிய புலனாய்வு முகமை புதிய குற்றப்பத்திரிக்கை ஒன்றை பதிவு செய்திருக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
தடை செய்யப்பட்ட பாபர் கால்சா இன்டர்நேஷனல் மற்றும் பல்வேறு காலிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தாக கூறி இந்த குற்றப்பத்திரிக்கையானது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அந்த குற்றபத்திரிகையில் இவர்கள் உட்பட இதில் 14 குற்றவாளிகள் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றம் சாட்டி இருக்கிறது. இந்த குற்றசாட்டானது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டதற்காகவும், சமூக மற்றும் மதத் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள், பாடகர்கள் மற்றும் தொழிலதிபர்களை குறிவைத்து கொலைகளை நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டியதற்காகவும் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சாட்ட பட்டவர்கள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மட்டுமல்லாமல் கனடா, நேபாளம் மற்றும் பிற நாடுகளில் உள்ள காலிஸ்தான் சார்பு கூறுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்து இருக்கிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோரை தவிர்த்து ஜக்கு பகவான்புரியா என்ற ஜக்தீப் சிங், சச்சின் பிஷ்னோய் என்ற சச்சின் தபன், அன்மோல் பிஷ்னாய் என்ற பானு, விக்ரம்ஜீத் சிங் என்ற விக்ரம் பிரதர், சந்தீப் ஜஹந்தர் ஜார்யார் கலா ராணா என்கிற பிரதாப் சிங், ஜோகிந்தர் சிங், ராஜு மோட்டா என்ற ராஜேஷ் குமார், ராஜ் குமார், அனில் என்ற சிப்பி, நரேஷ் யாதவ் என்ற சேத், மற்றும் ஷாபாஸ் அன்சாரி என்ற ஷாபாஸ் ஆகியோர் மீது இந்த குற்றப்பத்திரிக்கையானது தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவரும், பாடகர் சித்து மூஸ் பாலா கொலை மற்றும் சல்மான்கானுக்கு பலமுறை கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான செய்திகளில் அடிக்கடி பிடித்தவருமான ரெளடி லாரன்ஸ் பிஷ்னோய், சல்மான்கான் மானை வேட்டையாடிய விவகாரத்தை குறிப்பிட்டு, அவரை கொல்வதே என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று அண்மையில் பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதில் அவர் பேசும் போது, “ சல்மான்கான் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். பிகானேரில் உள்ள எங்களது கோயிலுக்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்.
சல்மான் கானை கொல்வதே என்னுடைய வாழ்நாள் குறிக்கோள். சல்மான்கானின் பாதுகாப்பை நீக்கினால் அவரை நான் கொன்று விடுவேன்.” என்று பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “ சல்மான்கான் மன்னிப்பு கேட்டால் இந்த விவகாரம் முடிவுக்கு வரும். சல்மான்கான் திமிர் பிடித்தவர். மூஸ் வாலாவும் அப்படித்தான்.ராவணனை விட சல்மான் கானின் ஈகோ பெரியது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்