Amit Shah: ’அடுத்த தேர்தலில் 300 தொகுதிகளுக்கும் மேல் வென்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்’ அமித்ஷா பேச்சு
உங்கள் புறக்கணிப்பால் எதுவும் நடக்காது. மக்களின் ஆசிகள் நரேந்திர மோடிக்கு உள்ளது-உள்துறை அமைச்சர் அமித்ஷா
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கும் முடிவை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகளை தாக்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நடவடிக்கை "மலிவான அரசியல்" என்று வியாழக்கிழமை கூறினார். மேலும் நரேந்திர மோடியை மக்கள் இரண்டு முறை பெரும் பெரும்பான்மையுடன் பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும், 2024 தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என்றும் கூறினார்.
அசாம் மாநிலம் கவுஹாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மே 28 ஆம் தேதி ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் ஆண்டில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்றும், ஆனால் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் அந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை எதிர்மறையானது. காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் மலிவான அரசியலுக்கும் புறக்கணிப்புக்கும் ஒரு உதாரணம் என தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் புதிய சட்டசபையின் பூமி பூஜையின் போது அப்போதைய கவர்னர் அழைக்கப்படவில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் ஆட்சியிலும், அசாமில் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும், மணிப்பூரில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்திலும் இதே போன்ற நிகழ்வுகள் நடந்ததாக அமித் ஷா மேற்கோள் காட்டினார்.
நாட்டு மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் ஆணையின் பேரிலேயே மோடி பிரதமராகி உள்ளதாக கூறிய அமித்ஷா, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அவரை பேச அனுமதிக்காமல் புறக்கணிப்பதாகவும் தெரிவித்தார்.
உங்கள் புறக்கணிப்பால் எதுவும் நடக்காது. மக்களின் ஆசிகள் நரேந்திர மோடிக்கு உள்ளது என்றும், புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவதில், ஜனநாயகத்தின் புதிய கோவில் இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த நாடும் விரும்புகிறது. புதிய இந்தியாவைக் கட்டியெழுப்புவது குறித்து விவாதம் நடைபெறுகிறது என்று கூறினார்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நாட்டின் 130 கோடி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அடுத்த தேர்தலில், இப்போது பெற்ற இடங்களை கூட காங்கிரஸ் கட்சி பெறாது. வரும் 2024 தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வென்று மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என அமித்ஷா பேசினார்.