தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Mahua Moitra After Bjp Leaders Seen On Stage With Bilkis Bano's Rapist

BJP: பாஜக எம்.பி., எம்எல்ஏவுடன் அமர்ந்திருந்த பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளி

Manigandan K T HT Tamil
Mar 27, 2023 09:14 PM IST

Bilkis Bano Case: தஹோத் பாஜக எம்.பி.யான ஜஸ்வந்த் சிங் பபோர், அவருடைய சகோதரரும் லிம்கெடா எம்எல்ஏவான சைலேஷ் பபோரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட நபர் (வட்டமிடப்பட்டுள்ளது)
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்ட நபர் (வட்டமிடப்பட்டுள்ளது) (@MahuaMoitra)

ட்ரெண்டிங் செய்திகள்

நேற்று நடந்த நிகழ்ச்சியில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான ஷைலேஷ் பட் பங்கேற்றார். அரசு நிகழ்ச்சி மேடையில் பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அருகே பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான ஷைலேஷ் அமர்ந்திருந்தார்.

தஹோத் பாஜக எம்.பி.யான ஜஸ்வந்த் சிங் பபோர், அவருடைய சகோதரரும் லிம்கெடா எம்எல்ஏவான சைலேஷ் பபோரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

குஜராத்த்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து வன்முறை, மதக்கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தின்போது கர்பிணியான பில்கிஸ் பானு தனது குடும்பத்துடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றார்.

அப்போது கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை 11 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும், அவரது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் தண்டனை காலம் முடியும் முன்னே கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி விடுதலை செய்தது.

இந்த விடுதலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஷைலேஷ் பட், பாஜக எம்எல்ஏ, எம்.பி.யுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து கடுமையாக விமர்சித்து கருத்தை பதிவு செய்திருந்தார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்