100 தொகுதிகள்! 10 முதல்வர்கள்! கர்நாடகாவை ஆளும் லிங்காயத்து சமூகம்!
Karnataka Election 2023: 1952 முதல் தற்போது வரை கர்நாடகாவில் பொறுப்பேற்ற 23 முதல்வர்களில், 10 பேர் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்கள்
தேர்தலை எதிர்கொள்ளும் கர்நாடகாவில், தேர்தலின் முடிவை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் சாதியும் ஒன்றாகும், அங்கு செல்வாக்கு மிக்க லிங்காயத்து எனப்படும் வீரசைவ-லிங்காயத் சமூகத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதும், அரசியலை பகுப்பாய்வு செய்வதும் முக்கியமாகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
லிங்காயத்து இயக்கம்
12 ஆம் நூற்றாண்டில் பசவண்ணா என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட வீர சைவ லிங்காயத்து பக்தி இயக்கம் சமூகத்தில் நிலவிய சாதி அமைப்புக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இந்த இயக்கம் தொழிலாளர் வர்க்கத்தினரின் பெரும் ஆதரவைப் பெற்றது.
'வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்கு பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை.
’இந்து மதத்தில் இருந்து மாறுபட்டது’
12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணா எழுதிய கருத்துகள், பின்னர் வந்த அக்கம்மா தேவி போன்றோர் வகுத்த நெறிகளைக் கொண்டதாக இந்த வழிபாடு உள்ளது என்பதால், தற்போது இந்து மதம் என்ற அறியப்படும் வழிபாட்டு முறையில் இருந்து லிங்காயத்து சமூகம் முற்றிலும் வேறுபடுகிறது'' என்கிறார் பேராசிரியர் மகாதேவப்பா.
மக்கள் தொகையில் ஆதிக்கம்
லிங்காயத்துகள் கர்நாடகாவின் மக்கள்தொகையில் 17 சதவீதம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 100 தொகுதிகளில் இந்த சமூகம் ஆதிக்கம் செலுத்துகிறது, இதில் பெரும்பான்மையான இடங்கள் வட கர்நாடக பகுதியில் உள்ளன.
மேலும் வொக்கலிகா சமுதாயத்தினர் 15 சதவீதமும், ஓபிசி பிரிவினர் 35 சதவீதமும், பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் 18 சதவீதமும், முஸ்லீம்கள் சுமார் 12.92 சதவீதமும், பிராமணர்கள் மூன்று சதவீதம் உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், 2013 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையே நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சாதிகளின் எண்ணிக்கையை அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
10 முதல்வர்கள்
தற்போதைய சட்டசபையில், ஆளும் பாஜகவைச் சேர்ந்த 37 பேர் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 54 லிங்காயத் எம்எல்ஏக்கள் உள்ளனர். மேலும், 1952 முதல் தற்போது வரை கர்நாடகாவில் பொறுப்பேற்ற 23 முதல்வர்களில், 10 பேர் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
வொக்கலிகா சமுதாயத்தை சேர்ந்த 6 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 5 பேரும், பிராமண சமூகத்தை சேர்ந்த 2 பேரும் இதுவரை கர்நாடக முதலமைச்சர்களாக பொறுப்பு வகித்துள்ளனர்.
ராஜீவ் காந்தியால் லிங்காயத்துகள் ஆதரவை இழந்த காங்கிரஸ்
வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற செல்வாக்கு மிக்க லிங்காயத்துகளின் ஆதரவை பெற பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டாபோட்டி போட்டு வேலை செய்து வருகின்றனர்.
1989 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியாக லிங்காயத்து சமூகம் இருந்து வந்தது. ஆனால் 1990ஆம் ஆண்டு பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்த அப்போதைய முதல்வர் வீரேந்திர பாட்டீல், ராஜீவ் காந்தியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அக்கட்சிக்கு எதிராக லிங்காயத்துகள் திரும்ப காரணமாக அமைந்தது.
1989 ஆம் ஆண்டு தேர்தலில் வீரேந்திர பாட்டீல் தலைமையில் மொத்தமுள்ள 224 இடங்களில் 178 இடங்களைப் பெற்று காங்கிரஸ் வென்ற நிலையில் பின்னர் நடந்த தேர்தலில் அந்த இடங்கள் வெறும் 34ஆக குறைந்தது.
பாஜகவின் வளர்ச்சியில் லிங்காயத்துகள்
ஜனதா பரிவார் சிதைவு மற்றும் பி.எஸ்.எடியூரப்பாவின் அரசியல் வளர்ச்சி ஆகியவை லிங்காயத்து சமூகத்தினல் பெரும்பகுதியை காவியை நோக்கி நகர்த்தியதுடன் கர்நாடக மாநிலத்தை பாஜகவின் தென்னிந்திய கோட்டையாக மாற்ற காரணமாக அமைந்தது.
கடந்த 2007ஆம் ஆண்டு வொகலிக்கா சமூகத்தை சேர்ந்த முன்னாள் முதலமைச்சரும், ஜேடி(எஸ்) தலைவருமான எச்.டி.குமாரசாமி, பாஜக-மதசாற்பற்ற ஜனதா தளம் கூட்டணியின் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்தை மீறி, எடியூரப்பாவை முதல்வராக்க மறுத்ததால் லிங்காயத்து சமூகத்தின் ஆதரவு மேலும் பாஜகவுக்கு ஆதரவாக மாறி அடுத்து நடந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2008 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, பெரும்பான்மைக்கு தேவையான 114 இடங்களில் 110 இடங்களை வென்று எடியூரப்பாவின் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த நிகழ்வு விந்திய மலைகளுக்கு தெற்கே பாஜக தனது முதல் அரசாங்கத்தை அமைக்க காரணமாக அமைந்தது. ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2013ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், எடியூரப்பா பிரிந்து சென்றதால், பாஜக வெறும் 40 இடங்களில் மட்டுமே வென்றது.
கர்நாடகாவின் லிங்காயத்து முகம் எடியூரப்பா
எடியூரப்பாவின் புதிய அமைப்பான KJP கட்சி வெறும் ஆறு இடங்களை மட்டுமே பெற முடிந்தது என்றாலும், அது சுமார் பத்து சதவீத வாக்குகளைப் பெற்றது. பல்வேறு தொகுதிகளில் ஓட்டுக்களை பிரித்து பாஜகவின் வாய்ப்புகளை மோசமாகப் பாதித்தது. பின்னர், 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எடியூரப்பா மீண்டும் பாஜகவில் இணைந்தார், மோடி தலைமையில், 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களை வென்றது.
லிங்காயத்து சமூகத்தின் அரசியல் முகமாக பார்க்கப்பட்டும் எடியூரப்பா மீண்டும் முதலமைச்சரானர். வயது மற்றும் கட்சிக் கொள்கையை காரணம் காட்டி, 2021 ஆம் ஆண்டில் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகியபோது லிங்காயத்து சமூகத்தின் ஆதரவின் முக்கியத்துவத்தை முழுமையாக அறிந்த பாஜக, அதே சமூகத்தை சேர்ந்த பசவராஜ் பொம்மையை முதல்வராக்கியது.
லிங்காயத்து ஆதரவை பெறும் முனைப்பில் காங்கிரஸ்
எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அவருக்கு முக்கியத்துவம் அளிப்பதில் பாஜக முன்னுரிமை அளித்து வருகிறது. இருப்பினும் அவரை கட்டாயப்படுத்தி அரசியலில் இருந்து பாஜக விலக்கியதாக பரப்புரைகளும் மேற்கொள்ளப்படுகிறது. 90களின் தொடக்கத்தில் இழந்த லிங்காயத்து சமூகத்தின் ஆதரவு தளத்தை மீண்டும் பெற காங்கிரஸ் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
லிங்காயத் சமூகத்தினருக்கு 'மத சிறுபான்மை' அந்தஸ்து வழங்க அப்போதைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இருப்பினும் லிங்காயத்துகள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்து, அதன் பெரும்பாலான தலைவர்கள் 'சிறுபான்மை அந்தஸ்து’ பெரும் மறு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.