ஒன்றா.. ரெண்டா.. இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முதலீட்டிலும் அருண் ஜெட்லியின் பங்களிப்பு.. ஓர் அலசல்..
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும், இந்திய அரசியலில் மறக்க முடியாத பல மாற்றங்களை கொண்டு வந்த அமைச்சராகவும் உள்ள அருண் ஜெட்லி குறித்த சில தகவல்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
சுதந்திர இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவர்களில் ஒருவராக அருண் ஜெட்லி இருந்துள்ளார் என்றே கூறலாம். அதற்கு காரணங்களும் இல்லாமல் இல்லை. 1952ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி டெல்லியில் பிறந்த அருண் ஜெட்லி படிப்பில் படு கெட்டி.
பாஜக உறவு
அருண் ஜெட்லி பள்ளி படிப்பை முடித்த பிறகு தந்தையை போலவே வழக்கறிஞர் ஆவதற்காக பயங்கரமாக படித்தார். அப்படி கல்லூரியில் இவர் படிக்க சென்ற காலககட்டத்தில் தான் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர்கள் அமைப்பான ஏபிவிபியில் இணைந்தார். பின் அதில் தன் முழு ஈடுபாடையும் செலுத்தி இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை எதிர்த்ததால் மிசா சட்டத்தின் கீழ் சிறைக்கும் செல்கிறார். இந்த விவகாரத்தில் அவர் தன் வாழ்நாளில் 19 மாதங்களை அதாவது ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக சிறையில் கழித்தார்.
அரசியலும் தொழிலும் இரு கண்கள்
சிறை சென்று வெளியே வந்த இவர் பாரதிய ஜனதா கட்சியில் அடுத்த கட்டத்திற்கு தன்னை கொண்டு செல்லும் விதமாக சில பொறுப்புகளையும் ஏற்கிறார். இதனால், விரைவிலேயே பல அரசியல் தலைவர்களின் நட்பு கிடைக்கிறது. இருப்பினும், அவர் தன் தொழில் வாழ்க்கையை கை விடவில்லை. பல மாநிலங்களின் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றிய ஜெட்லி, கூடுதல் சொலிசிட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெரும் புள்ளிகளுடன் நெருக்கம்
அந்த சமயத்தில் இவர், போபபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை கையில் எடுத்து, அதற்கான ஆவணங்களை எல்லாம் சேகரித்தார். மேலும், பெப்சி, கோகோ கோலா போன்ற நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் வாதாடினார். டெல்லி துணை நிலை ஆளுநரை தனியார் பத்திரிகைக்காக எதிர்த்து பல பெரும் புள்ளிகளுக்கு நெருக்கமானார்.
பின்னர் 1999ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் ராஜ்யசபை மூலம் நாடாளுமன்ற உறுப்பினரான அருண் ஜெட்லிக்கு சட்டம், நீதி, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை என மாபெரும் துறைக்கு அமைச்சராக அறிவிக்கப்பட்டார், பின் சில மாதங்களிலேயே கப்பல் துறைக்கும் அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.
மோடி, அமித்ஷா நலன் விரும்பி
அந்த சமயத்தில் குஜராத் கலவரம் விவகாரத்தில தற்போதைய பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷாவிற்கும் பக்கபலமாக இருந்து அந்த வழக்கில் தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். இதன் காரணமாகவே நரேந்திர மோடியால் குஜராத்தின் முதல்வராக பதவி ஏற்க முடிந்தது.
இதற்காக அவரை கௌரவப்படுத்தும் விதமாகவே 2014ம் ஆண்டு மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் அருண் ஜெட்லிக்கு நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
நிதித்துறையில் பங்களிப்பு
அப்போது தான் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், ஜிஎஸ்டி முறை அமல், பணமதிப்பிழப்பு கொள்கை போன்ற முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். மேலும் ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற நடைமுறையையும் கொண்டு வந்தார்.
மேலும், இவர் தான் வாராக் கடன்களை கண்காணித்து பொதுத்துரை வங்கிகளின் லாபத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்.
மேலும், இப்போது வரை பேசப்படும் வங்கிக் கணக்குகளுடன் பான் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கையையும் கொண்டு வந்தது இவர் தான்.
இவர் வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும் மற்றும் அமைச்சராகவும் மட்டும் இல்லாமல், கிரிக்கெட்டிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக டெல்லி கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்தியன் பிரீமியர் லீக் போன்ற கிரிக்கெட் சம்பந்தமான குழுக்களில் பணியாற்றினார்.
உடல்நலக் குறைவு
இப்படி, இந்திய அரசியல் வரலாற்றில் பல புதிய விஷயங்களை அமல்படுத்தி வந்த அருண் ஜெட்லி இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு பேன்ற உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததால், 2019ம் ஆண்டு 2ம் முறையாக பாஜக ஆட்சி அதிகாரத்தை பிடித்த போது பதவிகளை ஏற்க மறுத்தார்.
இந்நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக ஜெட்லி நியூயார்க் சென்று சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்காததால் மீண்டும் டெல்லி திரும்பி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து, சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரிசியலிலும், அதிகாரத்திலும் தன் எண்ணிலடங்கா பங்களிப்பை வழங்கி வந்த ஒரு சகாப்தம் முடிவு பெற்றது. அன்று அவர் விதைத்த விதைகள் தற்போது துளிர் விட்டு வளர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வழிவகுக்க ஆவண செய்து வருகிறது.