சீட் கிடைக்காத விரக்தி.. காங்கிரஸூக்கு தாவிய கர்நாடக மாஜி துணை முதல்வர்!
Karnataka Assembly Election: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவதி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, 189 தொகுதிகளில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா உட்பட 52 புதுமுகங்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இரண்டு அமைச்சர்கள் உட்பட 10 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்
இரண்டாவதாக 93 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலில், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தற்போது பதவியில் உள்ள 7 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சியமைக்க காரணமாக இருந்தவர்களில் பெரும்பாலனோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெலகாவி மாவட்டத்தின் அதானி தொகுதி, முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவதிக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்த நிலையில், பாஜகவில் இருந்து கடந்த புதன்கிழமை வெளியேறினார். தனது எம்எல்சி பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.
பாஜகவில் இருந்து விலகிய நிலையில், முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவதி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை இன்று நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், " ஒரு முக்கியமான தலைவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்கிறார். இவரைப் போன்ற நல்ல தலைவர்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்வது எங்களது கடமை. இன்னும் 10 க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏ க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு தயாராக உள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் லிங்காயத்துகள் சமூகத்தினரிடம், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிற்கு பின்னர், மிகவும் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் சாவதி, 2004, 2008, 2013 என மூன்று முறை தொடர்ந்து அதானி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், 2018-ல் அவர் தோல்வி அடைந்தார். இருப்பினும் தனது நெருங்கிய ஆதரவாளர் என்பதால் லக்ஷ்மனை மேல்சபை உறுப்பினராக்கி துணை முதல்வர் பதவி வழங்கி அழகு பார்த்தார் எடியூரப்பா. அதன் பின்பு பசவராஜ் பொம்மை முதல்வரானதும் லக்ஷ்மன் சாவதி மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. தற்போதைய தேர்தலிலும் அவர் ஓரம் கட்டப்பட்டார். இந்த நிலையில் தான் லக்ஷ்மன் சாவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
டாபிக்ஸ்