George Reddy: கிக் பாக்ஸர்.. இந்திய மாணவர் சமூகத்தின் முக்கிய போராளி.. திரையில் ஜார்ஜ் ரெட்டியாக பிரதிபலித்த சூர்யா
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  George Reddy: கிக் பாக்ஸர்.. இந்திய மாணவர் சமூகத்தின் முக்கிய போராளி.. திரையில் ஜார்ஜ் ரெட்டியாக பிரதிபலித்த சூர்யா

George Reddy: கிக் பாக்ஸர்.. இந்திய மாணவர் சமூகத்தின் முக்கிய போராளி.. திரையில் ஜார்ஜ் ரெட்டியாக பிரதிபலித்த சூர்யா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 15, 2025 06:45 AM IST

George Reddy: இந்திய மாணவர் சமூகத்தில் முக்கிய போராளியாகவும், பிடிஎஃப் என்கிற மாணவர் அமைப்பு உருவாக காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ரெட்டி. இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தான் மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தின் சூர்யா கேரக்டர் அமைந்திருக்கும்.

இந்திய மாணவர் சமூகத்தின் முக்கிய போராளி.. திரையில் ஜார்ஜ் ரெட்டியாக பிரதிபலித்த சூர்யா
இந்திய மாணவர் சமூகத்தின் முக்கிய போராளி.. திரையில் ஜார்ஜ் ரெட்டியாக பிரதிபலித்த சூர்யா

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் முக்கிய மாணவர் அமைப்பாக இருந்து வரும் பிடிஎஃப் தற்போது ஆந்திரா, தெலங்கானா என தெலுங்கு பேசும் மாநிலங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பதோடு, இந்தியாவின் மிக முக்கியமான மாணவர் அமைப்புளின் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் இந்த மாணவர் சங்கமானது இயங்கி வருவதுடன், மாணவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் அமைப்பாகவும் இருந்து வருகிறது

ஜார்ஜ் ரெட்டி பின்னணி

தெலுங்கு அப்பாவும், மலையாளி அம்மாவுக்கும் பிறந்தவரான ஜார்ஜ் ரெட்டி ஹைதராபாத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அத்துடன் அங்குள்ள பழமை வாய்ந்த் பல்கலைகழகமான ஒஸ்மானியா யுனிவெர்சிட்டியில் அணு இயற்பியலில் தங்க பதக்கம் வாங்கினார்.

கிக் பாக்ஸராகவும் இருந்து வந்த ஜார்ஜ் ரெட்டி, படிப்பில் சிறந்து விளங்கியதோடு, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மிக்கவராகவும் இருந்துள்ளார்.

மாணவர்களுக்கான அரசியல்

1960 காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே இருந்த ஏற்றத்தாழ்வுகள், சாதிய மற்றும் பொருளாதார தீண்டாமை, சமூக பாகுபாடு போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பவராக இருந்தார்.

நக்சல்பாரி மற்றும் ஸ்ரீகாகுளத்தில் விவசாயிகள் எழுச்சி, 1966இல் அமெரிக்காவில் தொடங்கிய பிளாக் பாந்தர்ஸ் அமைப்பு,. அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வியட்நாம் மக்கள் போராட்டம் போன்றவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜார்ஜ் ரெட்டி, மாணவர்கள் மத்தியில் மார்க்சிச அரசியலை முன்னிருத்தினார். இவரது சகோதரர் சைரில் ரெட்டியும் சமூக போராளியாகவே இருந்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில் ஜார்ஜ் ரெட்டி ஏற்படுத்தி எழுச்சி, அவரை வீழ்ச்சி அடையவும் செய்தது. 1972இல் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதலின் போது கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் ஜார்ஜ் ரெட்டி

விதையிட்ட மரணம்

இவரது இறப்பு தான் மாணவர்கள் மத்தியில் பிடிஎஃப் உருவாவதற்கான விதையிட்டது. மாணவனாக இருந்தபோது, அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்திக்கு அரசுக்கு எதிரான ஜார்ஜ் ரெட்டியின் மாணவர்கள் போராட்டம் இந்தியா முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தியது.

அவர் தொடங்கிய மாணவர் அமைப்பு பிடிஎஃப், ஜார்ஜ் ரெட்டி இறப்புக்கு பின்னரும் நாடு முழுக்க பல்வேறு தன் எழுச்சி போராட்டங்களும், எமெர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுக்கவும் காரணமாக இருந்தது.

ஜார்ஜ் ரெட்டியாக சூர்யா

இப்படி மாணவர்கள் சமூகத்தில் நிலவிய அநீதிகளுக்கு எதிராக குரலாக ஒலித்து நாடு முழுவதும் பரவலாக மாணவர் எழுச்சியை உருவாக்கியவரான ஜார்ஜ் ரெட்டியை முன்மாதிரியாக வைத்து பல சினிமாக்கள் தெலுங்கு, தமிழ் உள்பட பிற மொழிகளிலும் வந்துள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து படத்தில் சூர்யாவின் கதாபாத்திரமான மைக்கேல் வசந்த், ஜார்ஜ் ரெட்டி கதாபாத்திரத்தை வைத்து தான் உருவாக்கப்பட்டிருந்தது.

அதேபோல் ஜார்ஜ் ரெட்டி என்கிற பெயரிலேயே அவரது வாழ்க்கை வரலாற்றை செல்லும் விதமாக தெலுங்கு படமும் 2019இல் வெளியாகி வரவேற்பை பெற்றது. மாணவர்கள் சமூகத்தின் நிஜ ஹீரோவாக வலம் வந்து, அவர்களுக்காக தனது உயிர் நீத்த போராளியான ஜார்ஜ் ரெட்டியின் 78வது பிறந்தநாள் இன்று.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.